இதுதொடர்பாக புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமிக்கு மாநில மக்களைப்பற்றியோ, இளைஞர்களின் எதிர்காலம் பற்றியோ, மாநிலத்தின் கௌரவம் பற்றியோ எந்தவித அக்கறையும் இல்லை. தான் மட்டும் பதவியில் இருந்தால் போதும், மற்ற யாரைப்பற்றியும் எந்த கவலையும் இல்லை என்ற ரீதியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
2021 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தர்மத்தை மீறி லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்களின் முதுகில் குத்தி பெரும் துரோகத்தை முதலமைச்சர் இழைத்தார். தற்போது தனது கட்சி தொண்டர்களின் தன்மானத்தையும், சுயமரியாதையையும் தனது முதலமைச்சர் பதவிக்காக அடகு வைத்துள்ளார். கூட்டணி தர்மத்தை மீறி வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீயஜனதா கட்சி தான் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
முதலமைச்சர் தனக்கு மட்டும் பதவி வேண்டும் என்பதற்காக ராஜ்யசபா எம்.பி பதவியை விட்டுக்கொடுத்தார். முதலமைச்சர் பதவியை தவிர அனைத்து அதிகாரத்தையும் மேதகு துணைநிலை ஆளுநருக்கு தாரைவார்த்தார். தற்போது மீண்டும் முதலமைச்சர் பதவிக்காக, சுய மரியாதையை இழந்து லோக்சபா எம்.பி பதவியையும் விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளார். தன்மானம், சுயமரியாதை இல்லாத முதலமைச்சரால் புதுச்சேரிக்கு எப்படி மாநில அந்தஸ்தை பெற்றுத்தர முடியும்? மத்திய அரசு மூலம் புதுச்சேரியின் கடன்களை எப்படி தள்ளுபடி செய்ய முடியும்? ஜனநாயகப்படி எப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியும்? புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு சுயமரியாதை இல்லாத முதலமைச்சரால் என்ன செய்துவிட முடியும்?
சுயமரியாதை, தன்மானம் இழந்து தனது முதலமைச்சர் பதவியை மட்டும் காப்பாற்றிக்கொள்ள அவர் ஆடும் கபட நாடகத்தை புதுச்சேரி மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். முதலமைச்சரின் உண்மை சுயரூபத்தை அறிந்துகொண்டு, வரும் பாராளுமன்ற தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை புதுச்சேரி மாநில மக்கள் புறக்கணித்து, புதுச்சேரி மண்ணின் தன்மானத்தையும், சுய மரியாதையையும் காப்பாற்ற வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.