புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பாதுகாப்பு விஷயத்தில் அரசு அலட்சியமாக இருந்த காரணத்தால் அலையில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளதற்கு புதுச்சேரி அரசு முழு பொறுப்பேற்று, இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: –
கிறிஸ்மஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை மற்றும் விழாக்காலமான இத்தருணத்தில் கூடுதல் விழிப்புணர்வுடன் அரசு நிர்வாகம் செயல்பட்டிருக்க வேண்டும். மாநிலத்தின் வருவாய் மட்டுமே அரசின் பிரதான நோக்கமாக இருக்கக் கூடாது. மக்களின் உயிர் பாதுகாப்பும், சுகாதார பாதுகாப்பும் முக்கியமானது என்பதை அரசு கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். கட்டுப்பாட்டின் மூலமும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் மட்டுமே பெரும் செலவினத்தையும், உயிரிழப்பையும் தவிர்க்க முடியும் என்பதை அரசு உணர்ந்திருக்க வேண்டும்.
அப்படி உணர்ந்திருந்தால் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அரசு தாராளம் காட்டி இருக்காது. அரசு சார்பிலும், தனியார் மூலமும் கட்டவிழ்த்து விடப்பட்ட கலைநிகழ்ச்சிகளால் வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் உள்ளூர் மக்கள் லட்சக்கணக்கில் குவிந்தனர். இதனால் புதுச்சேரியே திண்டாடியது. குறிப்பாக கடற்கரை பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. இவ்வளவு பெரிய அளவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதியளித்த புதுச்சேரி அரசு பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாக இருந்துள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளிக்காத காரணத்தால் பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாட்டர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையே தகறாறு ஏற்பட்ட சம்பவங்கள் பல நடந்துள்ளன. கடற்கரை, சுண்ணாம்பாறு போன்ற சுற்றுலா இடங்களில் போதிய அடிப்படை வசதிகளும் பாதுகாப்பும் இல்லாத காரணத்தால் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளானார்கள். பாதுகாப்பு இன்மையால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வந்த ஒரு இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதையெல்லாம் தாண்டி கடற்கரையில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் ஒன்று திரண்டதால் கடலோரத்தில் புத்தாண்டு கொண்டாடிய நான்கு மாணவர்கள் பெற்றோர் கண் முன்னே அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ள பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இறந்த மாணவர்கள் அனைவரும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பெற்றோர்கள் துணையுடன் சென்ற நெல்லித்தோப்பு தொகுதி டி.ஆர். நகரில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12–ஆம் வகுப்பு மாணவி மோகனா மற்றும் அவரது தங்கை பத்தாம் வகுப்பு மாணவி லேகா ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும் எல்லைப்பிள்ளைச்சாவடியை சேர்ந்த 12–ஆம் வகுப்பு மாணவர் நவீன், சாரம் பாலாஜி நகரைச் சேர்ந்த மாணவர் கிஷோர் ஆகியோரும் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த நான்கு மாணவர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது உயிரிழந்துள்ள இச்சம்பவம் மிகவும் துயரமானது.
முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் புதுச்சேரி அரசு அலட்சியமாக இருந்ததே இதற்கு காரணம். மாணவர்கள் இறப்புக்கு புதுச்சேரி அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இனிவரும் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் அலட்சியம் காட்டாமல் அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.