புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் இடைவிடாமல் மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக பாவணன் நகரில் மழை நீருடன், கழிநீர் கலந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிகுள்ளாகியுள்ளனர். இதேபோல் இந்திராகாந்தி சதுக்கம், ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், டி.வி.நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையின் காரணமாக வாரத்தின் முதல் நாளான இன்று பணிக்கு செல்பவர்கள் சிரமடைந்துள்ளனர்.
இதனிடையே தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மீனவர்களும் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.