புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் சட்டவிரோதமாக சூதாட்ட கிளப் செயல்பட அனுமதி அளித்த நகராட்சி ஆணையரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றின் கரையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் பிராந்தியம் உள்ளது. ஏனாமில், மனமகிழ் மன்றம் பெயரில் அரசின் அனுமதியின்றி பல சூதாட்ட விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் அனுமதி பெறாத மன்றங்களை மூட அரசு நடவடிக்கை எடுத்தது. மேலும் ஏனாமில் செயல்பட்டு வரும் சூதாட்ட கிளப்பால் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக தொடர் புகார் எழுந்ததன் காரணமாக, சூதாட்ட கிளப்பை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்குமாறு ஏனாம் நகராட்சி ஆணையர் அருள்பிரகாசத்தை, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால் அவர் சூதாட்ட கிளப்பை மூட நடவடிக்கை எடுக்காமல், தொடர்ந்து செயல்பட அனுமதி அளித்ததால் நகராட்சி ஆணையர் அருள் பிரகாசத்தை தற்போது பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.