அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை… அகண்ட திரையில் பார்த்து தரிசனம் செய்த முதல்வர் ரங்கசாமி

அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. வேத மந்திரங்கள் ஓத ராமர் சிலையின் கண்களில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட்டு பிறகு தாமரை மலரைக்கொண்டு பிரதமர் பிராண பிரதிஷ்டை செய்து ராமர் கோயிலை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக புதுச்சேரி அரசு இன்று மாநிலத்திற்கு பொது விடுமுறையை அளித்துள்ளது. மேலும் புதுச்சேரியில் கோயில்கள் மற்றும் பல்வேறு பொது இடங்கள் என 300 க்கும் மேற்பட்ட இடங்களில் ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழாவின் நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

புதுச்சேரியில் மிகவும் பிரசித்துபெற்ற வேதபுரீஸ்வரர் கோயிலில் அகண்ட திரையில் ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா நேரலையில் ஒளிபரப்பபட்டது. இதை முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் அமர்ந்து பார்வையிட்டனர்.

முன்னதாக அமைச்சர்களுடன் வரதராஜப்பெருமாள் கோயிலுக்கு சென்ற முதல்வர் ரங்கசாமி கோதண்டராமர் சன்னதியில் வழிபட்டார்.