புதுச்சேரியில் பள்ளி மாணவனிடம் அவசரம் என உதவி கேட்பது போல் நாடகமாடி, நூதன முறையில் ஏமாற்றி 25 ஆயிரம் மதிப்புடைய விலை உயர்ந்த புதிய சைக்கிளை திருடி சென்ற பெண்ணை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட நாராயணதாஸ் வீதியைச் சேர்ந்த 9 ம் வகுப்பு பள்ளி மாணவன், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் தனது பெற்றோர்கள் வாங்கித் கொடுத்த ரூ. 25 ஆயிரம் மதிப்புடைய தனது விலை உயர்ந்த புதிய சைக்கிளில் நேற்று மதியம் அருகில் உள்ள கடைக்குச் சென்று வீட்டிற்கு திரும்பிய நிலையில், அவரைப் பின் தொடர்ந்து வந்த பெண் ஒருவர் வீட்டிற்குள் இருந்த மாணவனை அழைத்து, தனது கையில் கொண்டு வந்த மணிபர்ஸ் அருகில் உள்ள கடையருகே தவறிவிட்டது. யாரேனும் எடுத்து விடுவார்கள் சைக்கிளை தந்தால் உடனே சென்று எடுத்து வந்து சைக்கிளை திரும்ப கொடுக்கிறேன் என உதவி கேட்பது போல் நூதன முறையில் நாடகமாடியுள்ளார். மாணவன் பரத் அவசரம் என உதவி கேட்கிறார் என நம்பி சைக்கிளை கொடுத்து அனுப்பியுள்ளார். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்ற அந்த பெண் நீண்ட நேரமாகியும் திரும்ப வரவில்லை. மாணவனும் சைக்கிள் வரும் என எதிர்பார்த்து வாசலிலேயே காத்திருந்த நிலையில், சைக்கிளை எடுத்துச் சென்ற பெண் திரும்ப வராததால் சைக்கிள் திருடப்பட்டதை அறிந்த மாணவன் பரத்தின் பெற்றோர்கள் பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சைக்கிளை திருடி சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.