புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் உணவு திருவிழா, பீர் திருவிழா, இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்படுகள் தயார் நிலையில் உள்ளன.
ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வருவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு கிறிஸ்துமஸ், அரையாண்டு தேர்வு விடுமுறை என தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், புதுச்சேரியில் குளு, குளுவென குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதாலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக
புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் ஓட்டல்களில் பெரும்பாலான அறைகள் முன்பதிவு முடிந்துவிட்டது.
மேலும் சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுவதற்காக ஓட்டல்கள், மைதானங்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் வண்ணமயமான ஒளி விளக்கு அலங்காரங்கள், உணவு திருவிழா, இசை மற்றும் நடன நிகழ்ச்சிக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றிற்கான டிக்கெட் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக மதுவுக்கு பேர்போன புதுச்சேரியில் இந்தாண்டு புத்தாண்டை முன்னிட்டு அண்ணாசாலையில் உள்ள கட்டமரான் பிரேவிங் கோ-பாண்டி’ என்ற நிறுவனம் பீர் திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இங்கு ரோஜா பூ இதழ் , வெட்டி வேர் மற்றும் பிளம் பழம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு இயற்கையான முறையில் பீர் தயாரித்து சுற்றுலாப் பயணிகளுக்கு பரிமாறப்பட உள்ளது. இயற்கையான முறையில் இந்த பீர் தயாரிக்கப்படுவதால், இது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காது என இதன் உரிமையாளர் ரங்கராஜ் தெரிவித்துள்ளார். மேலும் ரூபாய் 2,500 கட்டணத்தில் அன்லிமிடெட் பீர் மற்றும் உணவு வகைகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 31 ஆம் தேதி இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி இசை நிகழ்ச்சிகளுடன் இந்த பீர் திருவிழா நடத்தப்பட உள்ளது. மேலும் 6385596777 எண்ணிற்கு கால் செய்து சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதேபோல் பல்வேறு மதுபானக் கடைகளில் புத்தாண்டை முன்னிட்டு புதியவகை வெளிநாட்டு மதுபானங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை முன்னிட்டு புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில் வரும் 31-ம் தேதி பகல் 2 மணி முதல் ஜனவரி 1-ம் தேதி திங்கள்கிழமை காலை 9 வரையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.