புதுச்சேரியில் லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பிரந்தநாள் விழா ஏற்பாடுகளை செய்துவிட்டு வீடு திரும்பிய‌ பாஜக பிரமுகர் உமாசங்கர்.! நள்ளிரவில் வெட்டி சாய்த்த கும்பல்…

புதுச்சேரியில் நள்ளிரவில் பாஜக பிரமுகரும், ரவுடியுமான உமாசங்கரை‌ நள்ளிரவில் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சாமிபிள்ளைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் உமாசங்கர் (40). இவர் காமராஜ் நகர் தொகுதி பாஜக பொறுப்பளராக உள்ளார். இவர் மீது வழிப்பறி, பாலியல் தொழில், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் லாஸ்பேட்டை காவல் நிலையத்தின் ரெளடிகள் பட்டியலில் இருக்கும் இவர், புதுச்சேரி பா.ஜ.க-வின் மாநில இளைஞரணி துணைத் தலைவராக இருந்துவந்துள்ளார்.

இந்நிலையில் இன்று தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பிறந்தநாள் விழா கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள பாரீஸ் திருமண நிலையத்தில் நடைபெற இருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகளை அவர் நேற்று இரவு மேற்கொண்டிருந்தார். அந்த பணிகளை முடித்துவிட்டு அங்கிருந்து நள்ளிரவு 12 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பாட்டார். அப்போது அங்கு 5 இருசக்கர வாகனங்களில் வந்த 10 க்கும் மேற்பட்ட கும்பல் உமாசங்கரை அரிவாள் மற்றும் கத்தியால் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலையே உமாசங்கர் உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த உமாசங்கரின் தாய் மற்றும் அவரது மனைவி சாலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்த அவரது உடலை கண்டு கதறி அழுதனர்.

இதனிடையே சீனியர் எஸ்.பி கலைவாணன் தலைமையில் லாஸ்பேட்டை காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது அவரது தாய் மற்றும் உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்யும் வரை உமாசங்கரின் உடலை எடுக்கக்கூடாது என, கூறியதால் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி, நள்ளிரவு 1:30 மணிக்கு மேல் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும் இது தொடர்பாக லாஸ்பேட்டை காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
நள்ளிரவில் நடந்த இந்த கொலை சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால் முன் விரோதம் காரணமாக யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.