புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.! போலீசார் தீவிர சோதனை

புதுச்சேரியில் இன்று காலை 3 தனியார் நட்சத்திர விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது முதலமைச்சர் ரங்கசாமியின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து முதலமைச்சர் இல்லத்தில் காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரியில் கடற்கரை சாலை அருகில் புகழ்பெற்ற தனியால் விடுதி (ஹோட்டல் புரமேனட்) இந்த விடுதிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்தது. இதனையடுத்து விடுதி நிர்வாகத்தினர் பெரியகடை காவல்நிலைத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் பெரியகடை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் அந்த உணவகத்தில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதேபோல் ஈஸ்வரன் கோயில் தெருவில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கும், மகாத்மா காந்தி வீதியில் உள்ள பிரபல விடுதிக்கும் மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தொடர்ந்து அந்த விடுதிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாயுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

இதனிடையே கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள முதலமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கேயும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகைக்கும் அதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. தற்போது முதலமைச்சர் வீடு, புகழ்பெற்ற தனியார் விடுதிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல்கள் அனைத்தும் இமெயில் மூலம் வந்துள்ளதால் சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.