அரசு பங்களாவில் கைமாறிய ரூ. 25 லட்சம் லஞ்ச பணம்… கையும் களவுமாக சிக்கிய புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன்.! சிபிஐ அதிரடி – ஆட்சியாளர்கள் கலக்கம்…

தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ரூபாய் 25 லஞ்சம் கேட்டதாக புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சி.பி.ஐ லஞ்ச ஒழிப்பு மற்றும் குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகள் 22 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது.

புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் காரைக்கால் மாவட்டத்திற்கு நேற்று (22.03.2025) காலை வந்துள்ளார். அப்பொழுது பல்வேறு அரசு பணிகளை ஆய்வு செய்த பின்னர், கடற்கரை சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தங்கு விடுதியில் ஓய்வு எடுத்துள்ளார். அப்பொழுது அங்கு திடீரென வந்த சி.பி.ஐ லஞ்ச ஒழிப்பு மற்றும் குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகள், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் மற்றும் ஐந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை மடக்கிப்பிடித்து விசாரணையை தொடங்கினர். நேற்று மதியம் தொடங்கிய இந்த விசாரணை இன்று (23.03.2025) மதியம் வரை சுமார் 22 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை முடிவில்,
சி.பி.ஐ அதிகாரிகளின் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர் சிதம்பரநாதன் மற்றும் ஒப்பந்ததாரர் என மூன்று நபர்களை கைது செய்து, காரைக்கால் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்ற குடியிருப்பில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி, அவர்களை காரைக்கால் கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும் புதுச்சேரியில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் வீடு, காரைக்கால் பகுதியை சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் நடத்திய சோதனை முடிவடைந்துள்ளது.

சி.பி.ஐ விசாரணை குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

காரைக்காலில் சாலை அமைக்கும் பணியை டெண்டர் எடுத்து மேற்கொண்டு வரும், தமிழகத்தின் மன்னார்குடியை சேர்ந்த கட்டுமான நிறுவனத்திடம் ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டு புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாகவும், இது தொடர்பான செல்போன் உரையாடல் அடங்கிய புகார் சென்னை சி.பி.ஐ அதிகாரிகளுக்கு சென்றதாகவும், நேற்று காரைக்காலில் பொதுப்பணித்துறை துறைக்கு சொந்தமான அரசு விடுதியில் வைத்து கட்டுமான நிறுவனத்தடம் ரூபாய் 25 லட்சம் லஞ்ச பணத்தை, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வாங்கியபோது, அவர்களை சி.பி.ஐ அதிகாரிகள் சுற்றி வளைத்ததாக தெரியவந்துள்ளது.

மேலும் இதற்கு முன்பு பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்ற எந்தெந்த பணிகளுக்கு லஞ்சம் பெறப்பட்டது? லஞ்ச பணம் யார் யாருக்கெல்லாம் பிரித்து கொடுக்கப்பட்டது? இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என சி.பி.ஐ அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் சி.பி.ஐ வசம் சிக்கியுள்ளதால் புதுச்சேரியில் ஆட்சியாளர்கள் கலக்கமடைந்துள்ளது.