புதுச்சேரியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் தமிழில் பெயர் பலகை வைப்பது கட்டாயம் என முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ம் தேதி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி கடந்த 12-ம் தேதி புதுச்சேரிக்கான 2025-26-ம் ஆண்டுக்கான புதுச்சேரி பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் 6 ஆம் நாளான இன்று உறுப்பினர்களின் கேள்வி – பதில் மற்றும் பட்ஜெட் மீதான பொது விவாதமும் நடைபெற்றது. அப்போது உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் தமிழை தவிர்த்து பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர். அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் உள்ள அனைத்து வணிகர்கள், வியாபாரிகள் கட்டாயமாக தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்பது உணர்வு, கடமை. அரசு சார்ந்த அழைப்பிதழை தமிழில் தான் அச்சடித்து வெளியிட வேண்டும். தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.