நாட்டில் உள்ள 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டபேரவையின் நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்க நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சரவை முடிவு செய்தது. இது ஒரே நாடு ஒரே செயலி என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதன்படி அனைத்து மாநில சட்டபேரவைகளும் காகிதமில்ல நடவடிக்கைக்கு மாறும் வகையில் ரூ.673. 94 கோடி ஒப்புதல் வழங்கப்பட்டு இந்த பணிகள் நடந்து வருகிறது. அதன்படி புதுச்சேரியில் உள்ள சட்டபேரவையை ரூ.8.16 கோடி செலவில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு தேசிய இ-விதான் செயலியை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் இன்று தனியார் உணவகத்தில் துவங்கி வைத்தார்.
இதில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச்செயலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து துறை அதிகாரிகள் அதனை விரைந்து செயல்படுத்த வேண்டும், எவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி வந்தாலும் அதனை செயல்படுத்த வேண்டிய மனசும் அவர்களுக்கு வர வேண்டும், புதுச்சேரியில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் இது போன்ற தொழில்நுட்பங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.
புதுச்சேரியில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ரூ.8.16 கோடி செலவில் புதுச்சேரி சட்டபேரவை மின்னனு உட்கட்டமைப்பு மேம்படுத்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் எம்.எல்.ஏ.க்களின் இருக்கைகளில் டேப்லட் டிவைஸ் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து எம்எல்ஏக்கள், அதிகாரிகளுக்கு இதற்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அடுத்த சட்டமன்ற கூட்டம் முழுமையாக காகிதமில்லா சட்டசபையாக செயல்பட உள்ளது குறிப்பிடதக்கது.