கொப்பரை தேங்காய்க்காக ஆன்லைனில் ரூ. 1 கோடியே 35 லட்சத்தை இழந்த தொழிலதிபர்… புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் விசாரணை

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய கொப்பரை தேங்காய் தருவதாகக் கூறி புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ஆன்லைன் மூலம் ஒரு கோடியே 35 லட்சம் மோசடி செய்த நபர் குறித்து இணையவழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு மொத்தமாக கொப்பரை தேங்காயை தமிழகம் முழுவதும் இருந்து கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்து வருகின்றனர். இதனிடையே துபாயில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய கொப்பரை தேங்காய்களை வாங்கி அனுப்பும் ஆர்டர் கிடைத்ததால், புதுச்சேரியில் உள்ள அந்த நிறுவனத்தின் உரிமையாளர் உடனடியாக நிறைய கொப்பரை தேங்காய் வாங்க வேண்டும் என்பதால், இணையதளத்தில் தேடினால் நிறைய வியாபாரிகளின் தொடர்பு கிடைக்கும் என்று நினைத்து, இணைய வழியில் கொப்பரை தேங்காய் வியாபாரம் செய்யும் நிறுவனங்களை தேடியுள்ளார்.

அப்போது ஒரு நபரின் தொலைபேசி எண் கிடைத்துள்ளது. அந்த நபரை அவர் தொடர்புகொண்டு பேசியபோது அவர் பெரிய அளவில் கொப்பரை தேங்காய் வியாபாரம் செய்வதாகவும், உங்களுக்கு எவ்வளவு கொப்பரை தேங்காய் வேண்டுமோ அதற்கு ஏற்ப முன்பணம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். அந்த நபரை கூறியதை நம்பி கடந்த நான்கு மாதங்களில் ஒரு கோடியே 35 லட்சம் பணத்தை அவர் கூறிய பல வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். பிறகு அந்த நபரை தொடர்புகொள்ள முடியாமல் போனதால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, புதுச்சேரி இணையவழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது சம்பந்தமாக இணையவழி காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், ஆய்வாளர் கீர்த்தி மற்றும் தியாகராஜன் விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த 26 நாட்களில் மட்டும் புதுச்சேரியைச் சேர்ந்த 582 நபர்கள் இணையவழி மோசடியில் சிக்கி 8 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை இழந்துள்ளனர். பொதுமக்கள் இணைய வழியில் பணத்தை செலுத்தும்போது அந்த நிறுவனம் குறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி இணையவழி காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.