பாலியல் குற்றங்களை தடுக்க புதுச்சேரி பள்ளிகளில் பிப்ரவரி 24 முதல் புகார் பெட்டி வைக்கப்படும்: அனைத்து பள்ளிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு – டிஐஜி சத்தியசுந்தரம் தகவல்

கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி தானாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும், ஆறு வயது சிறுமியிடம் அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் மணிகண்டன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றங்களை தடுக்க, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைக்க வேண்டுமென அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்பினர் வலியுறுத்தியிருந்தனர்.

இதனிடையே இன்று புதுச்சேரி தமிழ் சங்கத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில், டி.ஐ.ஜி சத்தியசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தமிழ் சங்கத் தலைவர் முத்து, செயலாளர் சீனு மோகன்தாஸ் முன்னிலையில், பள்ளி மாணவர்கள் திருக்குறள் ஒப்புவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஐ.ஜி சத்திய சுந்தரம், தமிழ் சமுதாயம் எம்மதமும் சம்மதம் என கூறுவது திருக்குறள் காலத்திலிருந்து நிகழ்கிறது. கல்வி முக்கியம், புதுச்சேரியில் பள்ளிகளில் பாலியல் சீண்டலை தடுக்க நல்ல தொடுதல் எது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும். வரும் 24-ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கும் நிகழ்ச்சியை துணைநிலை ஆளுநர் துவக்கி வைக்கிறார். பள்ளிகள் முன்பு சமூகவிரோத நபர்களை கண்காணிக்க அனைத்து பள்ளிகள் முன்பும் போலீஸார் பணியில் அமர்த்தப்படுவர். தவறு செய்தவர்களை மறைக்காமல் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.