புதுச்சேரியில் இளைஞர் ஒருவர் சளி மற்றும் சுவாச பிரச்சனை காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பிற்கு தனியார் மருத்துவமனையே காரணம் எனக்கூறி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுச்சேரி – கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி பனித்திட்டு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் மதினேஷ்(26). இவர் கப்பலில் பணியாற்றி வரும் நிலையில், சளி மற்றும் சுவாசப் பிரச்சனை காரனமாக கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். காலை அனுமதிக்கப்பட்ட மதினேஷின் உடல்நிலை பிற்பகல் மோசமானதையடுத்து, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அவரை உடனடியாக ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுருத்தியுள்ளனர். தொடர்ந்து அவரது உறவினர்கள் அதற்கான எற்பாடுகளை மேற்கொண்டு வந்த நிலையில், தனியார் மருத்துவமனையிலேயே மாதேஷின் உயிர் பிரிந்தது.
இந்நிலையில் மாதேஷின் உறவினர்கள் தனியார் மருத்துவமனை சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி, புதுச்சேரி – கடலூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்றதால் கடலூர் – புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் மற்றும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் பேச்சுவார்த்தை நடத்தியதால், மறியலை கைவிட்டு, மருத்துவமனை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் மீண்டும் இரவு 8.00 மணியளவில் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரவு 10 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் புதுச்சேரி – கடலுார் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். போலீசார், வாகனங்களை விழுப்புரம் – நாகப்பட்டினம் புறவழிச்சாலை வழியாக திரும்பி விட்டனர்.
மேலும் மதேஷக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் ஆனது என்றும், அவரது மனைவிக்கு அடுத்த வாரம் வளைகாப்பு நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.