புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று துணைநிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீது உறுப்பினர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்து வந்தனர். அப்போது பல உறுப்பினர்களும் பெஞ்சால் புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். அப்போது குறுக்கிட்டு பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா, பெஞ்சால் புயலால் வீடுகளை இழந்து தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்த மக்களுக்கு இதுநாள் வரை புதுச்சேரி அரசு முழுமையாக கணக்கெடுத்து முழு நிவாரணம் வழங்காமல் அவர்களை வஞ்சித்து உள்ளது. இதுகுறித்து இந்த சபையில் முறையாக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
இதற்கு அரசு தரப்பில் இருந்து பதில் ஏதும் வராத காரணத்தால் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், தியாகராஜன், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, புதுச்சேரி மாநிலத்தில் மழை வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றங்களால் வீடுகளை இழந்து உள்ளவர்கள் குறித்து கடந்த மூன்று ஆண்டுகளாக கணக்கெடுப்பு நடத்தியும் இன்னும் நிவாரணம் வழங்கவில்லை. அதேபோல் பெஞ்சால் புயல் புதுச்சேரியில் கரையை கடந்தபோது பெருத்த சேதம் ஏற்பட்டது. இதில் பொதுவாக அனைவருக்கும் ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டதே தவிர, வீடுகளை இழந்தவர்கள், கால்நடைகளை இழந்தவர்கள், ஆற்றுப்படுகையில் மழை, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி முழுமையாக நிவாரணம் வழங்க இந்த அரசு தவறிவிட்டது. இது குறித்து பேரவையில் கேட்டால் பதில் இல்லை. இனியும் தருவதாக தெரியவில்லை. இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.
தொடர்ந்து, மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே ஆட்சி இருந்தும் புதுச்சேரி அரசு கோரிய பேரிடர் நிதி ரூ. 700 கோடிக்கு வெறும் ரூ. 61 கோடி மட்டும் வழங்கி புதுச்சேரியை ஒன்றிய அரசு வஞ்சித்து உள்ளது என்றும், புதுச்சேரி அரசு வழங்கிய நிவாரண நிதி மற்ற துறைகளில் நலத்திட்டங்களுக்கு வைக்கப்பட்ட நிதி மடை மாற்றப்பட்டுள்ளது என்றும், இதனால் நலத்திட்டங்கள் தேக்கம் அடைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம்சாட்டினார்.