புதுச்சேரியில் 4 ஆயிரம் பேருக்கு செவித்திறன் பாதிப்பு: ஹெட்போன் அதிகம் பயன்படுத்தாதீங்க – சுகாதாரத்துறை எச்சரிக்கை.!!

இதுகுறித்து புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி அரசு மற்றும் உலக சுகாதர நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3-ம் தேதிஉலக செவிதிறன் தினமாக அனுசரிக்கப்படுகிறது. செவிப்புலன் மிக முக்கியமான உணர்வு உறுப்பு. தற்போது மொத்த மக்கள் தொகையில் ஆறு முதல் ஏழு சதவீதம் வரை செவித்திறன் குறைபாடு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே சிகிச்சை அளிக்கப்படாத செவிப்புலன் இழப்பு சமூக தனிமைப்படுத்துதலுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் வழிவகுக்கும் செவிப்புலன் பராமரிப்பு மற்றும் செவித்திறனை பாதுகாத்துக் கொள்வதற்கான கூட்டு நடவடிக்கையின் அவசியத்தை இந்த தினத்தில் வலியுறுத்தப்படுகிறது. செவித்திறனின் குறைபாட்டு சுமை இப்போது ஒலி மாசு மற்றும் அதீத சத்தத்தால் ஏற்படும் செவிப்புலன் இழப்பை தடுப்பது 2025 ஆம் ஆண்டின் உலக செவித்திறன் நாளின் கருப்பொருள் ஆகும்.

புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 39,000 பொதுமக்கள் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் 4,000 பேருக்கு காது கேளாமை இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு 2077 காது கேட்கும் கருவிகள் கடந்த ஆண்டில் பொருத்தப்பட்டன. மேலும் அறுவை சிகிச்சை மூலம் 2,100 காது கேளாமை தொடர்பான அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டது.

மூன்று குழந்தைகளுக்கு சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள காக்ளியரின் எம்பிளான்ட் (COCHLEAR IMPLANT) அதிநவீன கருவியை அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இதன்மூலம் அவர்களின் செவித்திறன் இயல்பு நிலைக்கு திரும்பியது மட்டுமில்லாமல் மற்ற சாதாரண குழந்தைகளுக்கு இணையாக அவர்கள் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட்டது. செவித்திறன் குறைபாடு தடுக்கவும் செவித்திறனை பாதுகாக்கவும் அதிக சத்தங்களை தவிர்த்து ஹெட்போன்களுக்கு இடைவெளி கொடுத்தும் பாதுகாப்பான செவிப்புல நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.