புதுச்சேரியில் வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மகளுக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலையை கண்டுபிடித்த போலீசார், நான்கு பேரை கைது செய்து ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான போலி மதுபானம் மற்றும் மூலப்பொருட்களை பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு போலி மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக மத்திய நுண்ணறிவு காவல் ஆய்வாளர் நடராஜனுக்கு ரகசிய தலவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே பூத்துறையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக புதுச்சேரியிலிருந்து வந்த கனரக லாரி மற்றும் கார் ஒன்றினை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில், கனரக லாரியில் போலி மதுபானங்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த அனுமந்தை கிராமத்தை சேர்ந்த ராஜசேகர், திருச்சியை சேர்ந்த கருத்தபாண்டி, புதுச்சேரியை சேர்ந்த பால்ஜோஸ், ராமநாதபுரத்தை சேர்ந்த சித்திக் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான போலி மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட கனரக லாரி மற்றும் காரினை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரி ஊசுடு தொகுதிகுட்பட்ட உளவாய்க்கல் பகுதியில், புதுச்சேரி மாநில வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாரின் மகளுக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் போலி மதுபான தொழிற்சாலையில் இருந்து தமிழகத்திற்கு போலி மதுபானங்கள் கடத்தி சென்று விற்பனை செய்து வந்தததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து உளவாய்க்கால் பகுதியில் அமைச்சர் தேனீ ஜெயக்குமாரின் மகளுக்கு சொந்தமான இடத்தில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்ட தமிழக காலால்துறை மற்றும் போலீசார், அங்கு சட்டவிரோதமாக போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வந்ததை உறுதிப்பத்தினர். அதனைத் தொடர்ந்து போலி மதுபான தொழிற்சாலைக்கு சீல் வைத்த போலீசார், தொழிற்சாலையில் இருந்த எரிசாராயம், போலி டாஸ்மார்க் ஸ்டிக்கர், பாட்டில்கள், 2 வாகனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, இதில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் வனத்துறை அமைச்சர் மகளுக்கு சொந்தமான இடத்தில் போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இதே வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாரின் மகளுக்கு சொந்தமான இடத்தில் கடந்த ஆண்டு ஜீன் மாதம் தமிழகத்தில் இருந்து கடத்தி வந்து சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 டன் சந்தன மரக்கட்டைகள் மற்றும் சந்தன சீவல்களை சேலம் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அப்பண்ணைக்கு சீல் வைத்தனர். மேலும் சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டைகளை கடத்தி வந்து ஆயில் எடுத்த விவகாரத்தில் வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.