புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் இருக்கும் 256 உதவியாளர் பதவிக்கான முதல்நிலை போட்டித்தேர்வு வரும் 27 ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வர்கள் போட்டித்தேர்வுக்கான நுழைவு சீட்டை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் உதவியாளர் பணியிடத்திற்கான முதல் நிலைத் தேர்வு (Tier-I) 27.04.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் நடைபெற இருக்கின்றது. இத்தேர்வுக்கான அனுமதி சீட்டை, தேர்வர்கள் https://recruitment.py.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து, 16.04.2025 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது தொடர்பாக ஏதேனும் விவரம் (அ) உதவி தேவைப்பட்டால், தேர்வர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.