புதுச்சேரி ஏனாம் அருகே சாலையில் நூற்றுக்கணக்கான மீன்கள் ஒரே நேரத்தில் வரிசையாக நெளிந்து செல்லும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அரிய காட்சியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இந்த அதிசய சம்பவம் ஆந்திராவின் காக்கிநாடா மாவட்டத்துக்கு அருகிலுள்ள மும்மிடிவரம் தொகுதியின் தானே லங்கா கிராமத்தில் நடைபெற்றது. இது புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்துக்கு அருகிலேயே அமைந்துள்ள பகுதியாகும்.
மழையால் நீர்நிலைகள் நிரம்பிய நிலையில், அருகிலுள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் வசிக்கும் “கிளைமிங் பெர்ச்” வகையை சேர்ந்த மீன்கள் (உள்ளூர் பெயர்: கோரகலு மீன்) நெளிந்து, சாலையில் வரிசையாக நகரும் காட்சியை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இந்த மீன்கள் சிறு பூச்சிகள், தாவரங்கள் மற்றும் மீன் செதில்களை உணவாக உட்கொள்ளும் நன்னீர் உயிரினங்களாகும்.
இந்த மீன்களுக்கு ஒரே நேரத்தில் நிலத்தில் வரிசையாக நகரும் தன்மை மட்டுமல்லாமல், சில நேரங்களில் மரம் ஏறும் திறனும் உள்ளது. இதன் வால் பகுதியில் உள்ள சிறப்பான அமைப்புகள் மற்றும் வளைந்த உடல் வடிவமைப்பு இதற்கு காரணம்.
ஏனாம் மீன்வளத் துறையின் உதவி இயக்குநர் தாதலா கோண்டேயா கூறும்போது, “இந்த கோரகலு மீன் மிகவும் பயனுள்ள மருத்துவ மீன். முழங்கால் மூட்டு வலிக்கு இவை நிவாரணமாக பயன்படுகிறது. தோலை நீக்கிய பிறகு சமைத்து உண்பது வழக்கமான முறையாகும்” என்றார்.
இந்த வீடியோவை பல உள்ளூர் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் பிரதான செய்தியாக வெளியிட்டுள்ளன. இது போன்ற அரிய இயற்கை நிகழ்வுகள் மீன் இனங்களின் தனித்துவத்தையும், அவர்களின் வாழ்வியலையும் நமக்கு எடுத்துரைக்கின்றன.