ஜிப்மரில் புதுச்சேரி நோயாளிகளுக்காக தனி கவுன்ட்டர்: இனி ஈசியா சிகிச்சை பெறலாம்!

புதுச்சேரியைச் சேர்ந்த நோயாளிகள் இனி ஜிப்மரில் எளிதாக மருத்துவ ஆலோசனை பெற தனி கவுன்ட்டர் மூலமாக வசதி செய்யப்பட்டுள்ளது என்று ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேகி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி கோரிமேட்டில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் நாள்தோறும் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வருகை தருகின்றனர். இதில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு முழுமையான மருத்துவ சேவைகள் கிடைப்பதில் சிரமம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் பின்னணியில், அவர்களுக்காக தனி கவுன்ட்டர் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இயக்குநர் வீர் சிங் நேகி தெரிவித்ததாவது: “2024 அக்டோபர் மாதம் முதல் செயல்பட்டு வரும் இந்த சேவை, ஸ்கிரீனிங் ஓபிடி பகுதியில் உள்ள 2 மற்றும் 3 எண்கள் கொண்ட கவுன்டர்களில் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த நோயாளிகள் தங்கள் ஆதார் அட்டையுடன் வரும்போது, அவர்கள் இக்கவுன்டரில் நேரடியாக ஆலோசனைக்கான பதிவேடு பெறலாம்.”

இந்த புதிய ஏற்பாடுகள், மருத்துவ சேவைகளைச் சீரமைக்கவும், நோயாளிகளின் நேரத்தையும் சிரமத்தையும் குறைக்கவும் உதவிகரமாக இருக்கும் என அவர் கூறினார்.