ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில் புதுச்சேரியில் உணர்ச்சி பொங்கிய ‘ராயல் சல்யூட்’ பேரணி – 5,000 பேர் பங்கேற்பு

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு வித்திட்ட முப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புதுச்சேரியில் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில் “ராயல் சல்யூட்” பேரணி நடைபெற்றது. இதில் 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கையில் தேசிய கொடி ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தகர்த்தது. இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு வித்திட்ட முப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் “ராயல் சல்யூட்” பேரணி தமிழகத்தை சேர்ந்த பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனும், மார்ட்டின் குழும நிர்வாக இயக்குனருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில் புதுச்சேரியில் நடைபெற்றது. பேரணியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட் ஜான்குமார், பாஜக ஆதரவு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் அங்காளன், சிவசங்கரன் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கையில் தேசிய கொடி ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, திருவள்ளுவர் சாலை, வள்ளலார் சாலை வழியாக காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற அலுவலகம் வந்து நிறைவடைந்தது. பேரணியில் பொய்க்கால் குதிரை, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என பல்வேறு தமிழர் பாரம்பரிய கலைகள் இடம்பெற்றன.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட தான் தயாராகி வருவதாகவும், அதற்காக பாஜகவில் சீட் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.