புதுச்சேரி காரைக்காலில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொண்டு இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்தனர்.
இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகின்றது. விடியற்காலை முதல் விரதமிருந்து மாலையில் இப்தார் என்னும் நோன்பு திறக்கப்படுகின்றது. இதையடுத்து 30 நாட்கள் மேற்கொள்ளும் விரதத்தில் 26 நோன்புகள் முடிவடைந்து 27அவது நோன்பிற்கான இப்தார் நிகழ்ச்சி காரைக்கால் மாவட்ட ஜமாத்தார்கள் சார்பில், காரைக்கால் மாவட்டம் காமராஜர் சாலையில் உள்ள சமீரா மஹாலில் மதநல்லினக்க அடிப்படையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி பங்குபெற்று இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன், சட்டப்பேரவை துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திர பிரியங்கா, கே.எஸ்.பி. ரமேஷ், லட்சுமிகாந்தன், பாஸ்கரன் (எ) தட்சணாமூர்த்தி, காரைக்கால் மாவட்ட ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.