புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 மணி நேரமாக நீண்ட வரிசையில் நின்று மாத்திரை வாங்க தவித்த நோயாளிகள்: கூடுதல் கவுண்டர்கள் அமைக்கப்படுமா?

புதுச்சேரியில் இயங்கி வரும் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையின் அலட்சியத்தால் நோயாளிகள் 3 மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்து, மாத்திரைகளை வாங்கிச்செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


புதுச்சேரி கோரிமேடு பகுதியில் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றது. இந்த மருத்துவமனைக்கு புதுச்சேரி மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு வெளிப்புற சிகிச்சை மற்றும் உட்புற சிகிச்சைக்காக சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். மேலும் ஜிப்மரில் புற்று நோய், நீரிழிவு நோய், மனநோய், இதய நோய், நரம்பியல், இதய அறுவை சிகிச்சை நோயியல், நரம்பு அறுவை சிகிச்சை நோயியல், சிறுநீரகவியல், சிறுநீரக மாற்று போன்ற சிகிச்சை எடுத்தவர்களுக்கு மாதந்தோறும் இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்குவது நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு வந்து செல்லும் இந்த மருத்துவமனையில் இலவச மருந்து, மாத்திரைகள் தர 6 கவுண்டர்கள் மட்டுமே செயல்படுகின்றன.

இந்நிலையில் நேற்று மாதாந்திர மருந்துகள் வாங்க வந்த நோயாளிகளின் கூட்டம் அதிகரித்ததால், நீண்ட வரிசையில் மூன்று மணி நேரம் நிற்க முடியாமல் ஆண்கள், பெண்கள் என வயது முதிர்ந்தவர்கள் கடும் அவதியடைந்தனர். மேலும் இது குறித்து மருந்தகத்தில் இருப்பவரிடம் கேட்டபொழுது சரியாக எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். உடல்நிலை சரியில்லாமல் நீண்ட தூரம் பயணித்து அதிகாலையிலோ, முதல் நாள்இரவிலோ புறப்பட்டு, காலையில் சிகிச்சை பெற்று விட்டு, மருந்து வாங்க வந்தால் இங்கேயும் அதிக நேரம் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும், மூன்று மணி நேரம் வரை வரிசையில் நிற்க வேண்டியுள்ளதால் உடல்நிலை மேலும் பாதிக்கப்படுவதாக நோயாளிகள் தங்கள் குமுரல்களை பதிவிட்டுள்ளனர். மேலும் இனிவரும் காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்க கூடுதல் கவுண்டர்களை திறக்க வேண்டுமென நோயாளிகள் வலியுறுத்தி உள்ளனர்.