புதுச்சேரியில் தனியார் நிறுவன அதிகாரி ஒருவரிடம், பேஸ்புக் மூலம் கனடா நாட்டு பெண் பெயரில் தங்க நகை, ஐபோன் என நம்ப வைத்து நூதன முறையில் 6.5 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் இணையவழி மோசடி சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் நடந்த புதிய மோசடி ஒன்றில், தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் பேஸ்புக் நட்பின் பெயரில் 6.5 லட்சம் ரூபாயை இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த 46 வயதான அந்த அதிகாரி, தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் கனடாவைச் சேர்ந்ததாக கூறும் ஒரு இளம் பெண்ணுடன் பழக ஆரம்பித்தார். நாளுக்கு நாள் அந்த நட்பு நெருக்கமாக வளர, இருவரும் தனிப்பட்ட வாழ்க்கை விவரங்கள், வீடு மற்றும் அலுவலக புகைப்படங்களை பரிமாறிக்கொண்டனர்.
பின்னர் அந்தப் பெண், நட்பின் அடையாளமாக தங்க நகைகள், வைர வாட்ச், ஐ-போன் மற்றும் வாசனை திரவியங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுகளை அனுப்புவதாக கூறினார். அது மட்டுமின்றி, அந்த பரிசுகளை வீடியோ மற்றும் புகைப்படங்களாக எடுத்து அவருக்குத் தொடர்ந்து அனுப்பினார்.
இறுதியில், இந்திய கஸ்டம்ஸ் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்ததாக கூறி ஒருவர் அந்த அதிகாரிக்கு தொடர்புகொண்டு, பரிசுகளை பெற்றுக்கொள்ள சுங்கவரி கட்ட வேண்டும் என கூறினார். அந்தத் திடீர் அழைப்பையும், ஏற்கனவே வந்த புகைப்படங்களையும் நம்பிய அதிகாரி, கூறப்பட்ட வங்கி கணக்கில் 6.5 லட்சம் ரூபாய் செலுத்தினார்.
பணம் செலுத்திய பின் எந்த பொருளும் வராததுடன், மெசேஜ்களும் அழைப்புகளும் அந்த பெண்ணிடம் இருந்து நிறுத்தப்பட்டன. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த அதிகாரி, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதேபோன்ற முறையில் புதுச்சேரியில் மட்டும் தற்போது வரை 20க்கும் மேற்பட்ட இணையவழி மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், வேலை வாய்ப்பு, பரிசுகள், வெளிநாட்டு நண்பர்கள் போன்ற பெயர்களில் நடக்கும் இம்மாதிரியான சதிகளை பொதுமக்கள் உணர்ந்து, விழிப்புடன் செயல்பட வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் நம்பிக்கையை வைத்து விளையாடும் இத்தகைய மோசடிகளை அடக்க, அரசு மற்றும் மக்கள் இருவரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இத்தகைய மோசடிகளை தடுக்க முடியும்.