கொரோனா பரவல் எதிரொலி! முகக்கவசம் கட்டாயமில்லை – மத்திய அமைச்சர் தகவல்

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது தற்போது கட்டாயமல்ல என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, அதன் 25 நாள் முன்னோட்ட நிகழ்ச்சி மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடைபெற்றது. இவ்விழாவை மத்திய ஆயுஷ் மற்றும் சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், தலைமை செயலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்து கலந்துகொண்டனர்.

மேடையில் உரையாற்றிய முதலமைச்சர் ரங்கசாமி, “உலகளவில் யோகாவை கொண்டு சென்றதில் பிரதமர் நரேந்திர மோடியின் பங்களிப்பு முக்கியமானது. யோகா மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையை கடைபிடிக்கலாம். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பள்ளிகளில் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், “மத்திய அரசு கொரோனா தடுப்புக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. தற்போதைய சூழலில் முகக்கவசம் கட்டாயமில்லை. மாநிலங்கள் தங்களது நிலைமையை பொருத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்” என தெரிவித்தார்.