ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியா–பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், புதுச்சேரியைச் சேர்ந்த கலைமாணவன் மரச்சிற்பங்கள் மூலம் அழகான அஞ்சலியை நிகழ்த்தியுள்ளார்.
சேலியமேடு கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷ், புதுச்சேரி அரசின் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நுண்கலை அறிவியல் துறையில் பயின்று வருகிறார். இயற்கையின் நலனை போற்றும் அவர், வீணாகக் கைவிடப்படும் மரப் பொருட்களை சேகரித்து அவற்றால் விழிப்புணர்வு சிலைகள், விலங்குகள், பறவைகள், தேசத் தலைவர்களின் உருவங்கள், மற்றும் மரச்சிற்பங்களைத் தத்ரூபமாக உருவாக்கி வருகிறார்.
அந்தவகையில், வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் துப்பாக்கி, தொப்பி, ஷூ போன்றவைகளை மரச் சிற்பமாக உருவாக்கி, நாட்டுக்காக தங்கள் உயிரைக் கொடுத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் படைப்பை உருவாக்கியுள்ளார். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இக்கலைப்பாடுகள், புதுச்சேரி மரப்பாலத்தில் உள்ள நுண்கலை பயிற்சி மையத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அங்கு வரும் மக்கள் அவரது சிந்தனையும், கலைத் திறமையையும் பாராட்டுகின்றனர்.
ஜெகதீஷ் தனது பள்ளிப் பருவத்தில், சேலியமேடு அரசு பள்ளியில் ஆசிரியர் உமாபதியிடம் நுண்கலை கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார். மேலும், சமீபத்தில் சமூகத்தில் பெரும் கவனத்தை பெற்ற கே.பி.ஓய் சாம்பியன் பாலாவுக்கு ஊக்கமாக மரப்பொருட்களை கொண்டு தத்ரூப பைக்கை உருவாக்கி பரிசாக வழங்கியுள்ளார்.
இவர் மரச்சிற்பங்கள் மூலம் சமூகத்திற்கும், தேசத்திற்கும் மேலான செய்திகளை வலியுறுத்தும் விதமான கலைப்பாடுகளை தொடர்ந்து உருவாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.