‘ஆபரேஷன் சிந்தூர்’: பாகிஸ்தான் மீது இந்தியா அதிரடியாக ஏவுகணை தாக்குதல்… 26 தீவிரவாதிகள் பலி.!

பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற குறியீட்டுப் பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மிகப்பெரிய தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில், இந்திய வான்படை, கடற்படை மற்றும் ராணுவம் ஒருங்கிணைந்த செயல்பாட்டுடன் 9 முக்கிய இலக்குகளை துல்லியமாக தாக்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததுடன், 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடைபெற்ற முக்கிய இடங்கள்:
1. மர்கஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் – ஜெய்ஷ் இ முகமது
2. மார்கஸ் தைபா, முரிட்கே – லஷ்கர் இ தொய்பா
3. சர்ஜால், தெஹ்ரா கலான் – ஜெய்ஷ் இ முகமது
4. மெஹ்மூனா ஜோயா, சியால்கோட் – ஹிஸ்புல் முஜாஹிதீன்
5. பர்னாலா, மர்கஸ் அஹ்லே ஹதீஸ் – லஷ்கர் இ தொய்பா
6. கோட்லி – ஜெய்ஷ் இ முகமது மற்றும் ஹிஸ்புல் முகாம்கள்
7. முசாபராபாத் – லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் முகாம்கள்

இந்த தாக்குதல்களில், அதிநவீன குண்டுகள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், துல்லியத் தாக்குதலால் முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘சிந்தூர்’ என்ற பெயர் காரணம்:

இந்த தாக்குதலுக்குப் பெயராக ‘சிந்தூர்’ என வைக்கப்பட்டதற்கான பின்னணி மிக உணர்வுப்பூர்வமானது. பஹல்காம் தாக்குதலில் கணவர்களை இழந்த பெண்களின் துயரத்திற்காக பழிதீர்க்கவே இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. திருமணமான பெண்கள் நெற்றியில் வைக்கும் ‘சிந்தூர்’ (குங்குமம்) இழக்கப்பட்டதற்காக இந்த பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பதிலடி: பதற்றம் உயர்வு!

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அறிவித்துள்ளதுடன், பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளில் கடுமையான பீரங்கித் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதில், மாந்தோட் பகுதியில் ரூபி கோர் என்ற பெண் உயிரிழந்தார் எனவும், மேலும் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்திய அரசு நடவடிக்கைகள்:
5 முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டன – ஜம்மு, ஸ்ரீநகர், லே, தர்மசாலா, அமிர்தசரஸ்.

ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

எல்லை பகுதிகளில் வான் பாதுகாப்பு அமைப்புகள் தயார் நிலையில்

பாதுகாப்பு துறை அமைச்சர் ஆலோசனை:
முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகின்றார். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக மதிப்பீடு நடைபெற்று வருகிறது.

சர்வதேசப் பார்வை:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரும்” என நம்பிக்கை தெரிவித்தார். “இந்தியா, பாகிஸ்தான் இடையேயான மோதல்கள் வரலாறில் புதிய அத்தியாயம் எழுதப்படுகின்றது” எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.

‘ஆபரேஷன் சிந்தூர்’ இந்திய ராணுவத்தின் மிகச்சிறந்த ஒருங்கிணைந்த தாக்குதல் நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது இந்தியா தன்னுடைய பாதுகாப்பு மற்றும் தேசிய மரியாதையை காப்பதற்காக எடுக்கும் கடுமையான தீர்மானங்களை உலகுக்கு காட்டுகிறது. இது தொடர்ந்து எந்தப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது.