சாலை விபத்தில் கணவர் உயிரிழப்பு; மூளைச்சாவான சீதாவின் இதயம், சிறுநீரகம், கல்லீரல் தானம் – நான்கு பேருக்கு புதிய வாழ்வு!

புதுச்சேரியில் மூளைச்சாவு அடைந்த கடலூர் பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, இதயம் சென்னைக்கும் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆம்புலன்சு மூலம் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் தானமாக பெறப்படும் உடல் உறுப்புகளை விரைவாக கொண்டுசெல்ல ஏர்-ஆம்புலன்ஸ் சேவையை தொடங்க வேண்டுமென அரசுக்கு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகில் எல்லப்பன்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் செல்வகணபதி (33) – சீதா (31) தம்பதியனர். இவர்கள் இருசக்கர வாகனத்தில் தங்களது இரண்டு குழந்தைகளுடன் கடந்த 11-ஆம் தேதி புதன்கிழமை தென்னம்பாக்கம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது தம்பிப்பேட்டை பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில், செல்வகணபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கீதா மற்றும் ஒரு குழந்தை படுகாயங்களுடன் மீட்கபட்டு புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த கீதா மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து, மூளைச்சாவு அடைந்த கீதாவின் உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து மருத்துவர்கள், அவர்களது உறவினர்களிடம் எடுத்துரைத்தனர். அதன்பின்னர், அவர்களும் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்டனர்.

தொடர்ந்து புதுச்சேரி மூலகுளம் பகுதியில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் தனியார் மருத்துவமனையில் முருகேசன், வெங்கட்ராம் தலைமையிலான மருத்துவ குழுவினர் சீதாவின் உடலில் இருந்து இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கும், கல்லீரல் மகாத்மாகாந்தி தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கபட்டது.
அதன்பின்னர், அந்த உடல் உறுப்புகள் சாலை மார்க்கமாக கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் ஆம்புலன்சுகள் இடையூறு இன்றி செல்லும் வகையில், வழிவகை செய்து கொடுத்தனர்.

இந்த உறுப்புகள் மூலம் நான்கு பேர் பயனடைவதால் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்ததாக சீதாவின் உறவினர்கள் தெரிவித்தனர். உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்த சீதாவின் குடும்பத்தினருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் இனிவரும் காலங்களில் தானமாக பெறப்படும் உடல் உறுப்புகளை விரைவாக கொண்டுசெல்ல ஏர்-ஆம்புலன்ஸ் சேவையை தொடங்க வேண்டுமென அரசுக்கு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.