புதுச்சேரியில் ஏலச்சீட்டு நடத்தி, ரூபாய் 30 லட்சத்திற்கு மேல் மோசடி செய்துவிட்டு தலைமறைவான தாய் மற்றும் மகள் மீது வழக்குப்பதிவு செய்து பணத்தை மீட்டுத்தரக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி குருமாம்பேட் சிவசக்தி நகரைச் சேர்ந்தவர்கள் செல்வி மற்றும் அவரது மகள் ராமலட்சுமி. இவர்கள் இருவரும் இணைந்து ரூபாய் 1 லட்சம் மற்றும் 1.5 லட்சம் மாத ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் தர்மபுரி கல்கி நகரைச் சேர்ந்த சங்கர் , ராஜலட்சுமி, அமுதா, இந்திராணி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டோர் சீட்டு கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் மாத ஏலச்சீட்டு நடத்தியதில் கிடைத்த 32 லட்சம் ரூபாயுடன் தாய் மற்றும் மகள் இருவரும் தலைமறைவாகினர். இதனால் அதிர்ச்சிக்குள்ளான பாதிக்கப்பட்டவர்கள் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் போலீஸார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட 20 க்கும் மேற்பட்டவர்கள் இன்று திடீரென மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, தங்கள் பணத்தை ஏமாற்றிவிட்டு தலைமறைவாக உள்ள செல்வி மற்றும் ராமலட்சுமி ஆகிய இருவர் மீதும் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, தங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டுமென கோஷங்களை எழுப்பினர். இதனால் மேட்டுப்பாளையம் காவல்நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களை போலீசார் அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.