புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்த தராத பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான்குமாரை அரசு விழாவில் பொதுமக்கள் முற்றுகையிட்டு சராமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு செல்வதற்காக “நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்” என்ற நிகழ்ச்சி புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினரான ரிச்சர்ட் ஜான்குமாரை, விழா மேடையிலேயே பொதுமக்கள் முற்றுகையிட்டு தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினை, சமுதாய நலக்கூடம், சாலை வசதி, மீன் மார்க்கெட் கட்டப்படாமல் உள்ளது உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளையும் தொகுதியில் செய்து தராததை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.
இதனால் செய்வதறியாமல் திகைத்து நின்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான்குமாரை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.