கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 2019-ம் ஆண்டு, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை வீடியோ எடுத்துத் தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்களின் கதறல்கள் அடங்கிய ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதும், இந்த வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பொள்ளாச்சி டவுன் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, முதலில் மாநில போலீசாரும் பின்னர் மத்திய விசாரணை அமைப்பான சி.பி.ஐ.-யும் வழக்கு விசாரணையில் ஈடுபட்டன. இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், திருநாவுக்கரசு, ஹேரேன் பால், பைக் பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல், அத்துமீறல், கூட்டுசதி, ஆபாச வீடியோ எடுப்பு மற்றும் பகிர்வு உள்ளிட்ட 13 கொடூர பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. சி.பி.ஐ. 2019-ம் ஆண்டு மே 21-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. விசாரணை தாமதமடைந்த நிலையில், ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் தனி அறையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. 2023-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சாட்சி விசாரணை தொடங்கிய நிலையில், இறுதிவாதம் முடிந்தது.
இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டது. 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கி, அவர்களுக்கு “சாகும் வரை ஆயுள் தண்டனை” விதித்து உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்படும் என்றும் சி.பி.ஐ. தரப்பின் வழக்கறிஞர் சுரேந்திர மோகன் தெரிவித்தார்.
இந்த வழக்கு, நீதி நிலைநாட்டப்பட்டதற்கான முக்கியமான முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.