புதுச்சேரி அரசு பாசன வாய்க்கால்களை முறையாக தூர்வாராததால் அறுவடைக்கு தயாராக இருந்த 1500 ஏக்கர் நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி சாய்ந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தில் மிதமான முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்த நிலையில், புதுச்சேரியில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து மழை பெய்தது. இந்த தொடர் மழையினால் புதுச்சேரியின் நெற் களஞ்சியமாக திகழும் பாகூர் பகுதியில் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. மேலும் கரிக்கலாம்பாக்கம், நெட்டப்பாக்கம், ஏம்பலம், கோர்க்காடு, திருக்கனூர், கைக்கிலப்பட்டு, சந்தை புதுக்குப்பம் உள்ளிட்ட
பகுதிகளிலும் சுமார் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சாய்ந்தன.
தை திருநாளை முன்னிட்டு இன்னும்
ஒரு சில வாரங்களில் அறுவடை செய்ய விவசாயிகள் தயாராக இருந்த நிலையில் தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சாய்ந்துள்ளது விவசாயிகளை கவலை அடையச்செய்துள்ளது.
இதுகுறித்து கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த விவசாயி குப்புசாமி கூறுகையில், கடந்த இரண்டு தினங்களாக பெய்த மழையால் எங்கள் நிலத்தில் பயிரப்பட்டிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் மழை நீர் மூழ்கி சாய்ந்துவிட்டது. இதற்கு காரணம் புதுச்சேரி அரசுதான். ஆண்டிற்கு ஒருமுறை பாசன வாய்க்கால்களை தூர்வாரியிருந்தால் நெற்பயிர்கள் மூழ்கியிருக்காது. ஆனால் புதுச்சேரி அரசு மூன்று ஆண்டிற்கு ஒருமுறைதான் தூர் வருகின்றனர். அரசு அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக உள்ளனர். அவர்கள் விவசாயிகளை மதிப்பதில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதில்லை. இந்த தை திருநாளை நெல் அறுவடை செய்துதான் கொண்டாட இருந்தோம். ஆனால் இப்படியாகிவிட்டது. இனி எப்படி வாழறதுன்னு தெரியல. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.