நவீன யுகத்தால் நாம் மறந்துபோன பொங்கல் வாழ்த்து அட்டையை மீட்டெடுக்கும் வகையில், அரசு பள்ளி மாணவ-மாணவிகள் வாழ்த்து அட்டையில் ஓவியம் வரைந்து, கவிதை எழுதி நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் உறவினர்களுக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அஞ்சல் மூலம் அனுப்பினர்.
முன்பெல்லாம் பொங்கல் பண்டிகை என்றாலே ஒரு மாதத்திற்கு முன்பிலிருந்தே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொங்கல் வாழ்த்து அட்டைகளை நண்பர்களுக்கு உறவினர்களுக்கும் அனுப்பி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பது வழக்கமாக இருந்தது. இந்த பொங்கல் வாழ்த்து அட்டைகள் விலைக்கு தகுந்தாற்போல் பல வகைகளில், பல வண்ண படங்களுடன் கடைகளில் விற்கப்பட்டது. பொங்கல் பண்டிகை சமயத்தில் ஒவ்வொரு வீட்டில் இருப்பவர்கள் யாராவது தங்களுக்கு பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பி உள்ளார்களா? என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அப்படி வாழ்த்து அட்டை வந்தவுடன் ஒரு பெரிய இன்பம் கிடைக்கும். அதேபோல் நம் நண்பர்களுக்கு நன்றி கூறும் வகையில் ஒரு வாழ்த்து அட்டையை அனுப்பி மகிழ்ச்சிகொள்வோம்.
இந்த மகிழ்ச்சியான நினைவுகள் காலப்போக்கில் செல்போன் பயன்பாடு வந்த நிலையில், தொடக்கத்தில் எஸ்எம்எஸ் வழியாக ஆரம்பித்து தற்போது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டிவிட்டர் என பல்வேறு வலைதளங்கள் வழியாக வாழ்த்துக்களை கூறி வருவதால், முற்றிலும் வாழ்த்து அட்டை அனுப்பும் முறையை கைவிட்டுவிட்டோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இப்படி நவீன யுகத்தால் அழிந்துவிட்ட பொங்கல் வாழ்த்து அனுப்பும் அழகான பழக்கத்தை மீட்டெடுக்கும் வகையில் புதுச்சேரி வில்லியனூர் அரும்பார்த்தபுரம் திரு.வி.க அரசு உயர்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியர் அன்பழகன் அறிவுறுத்தலின்படி மாணவ மாணவிகள் அனைவரும் பொங்கல் வாழ்த்து மடலை தாங்களே தயாரித்து, அதில் பல வண்ண ஓவியங்கள் வரைந்து அட்டையில் உள்ளே பொங்கல் வாழ்த்து கவிதையும் எழுதி தங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.