புதுச்சேரி முதலியார்பேட்டை காவல்நிலைய உதவி சப்-இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி கொம்பாக்கம் கமலம் நகரைச் சேர்ந்தவர் பாபு. இவரது தாய் இந்திரா, கடந்த 2022-ம் ஆண்டு கொம்பாக்கம் கூட்டுறவு வங்கியில் வைத்த 8 சவரன் நகை திருடுபோனது. இதனை மீட்டு தரக்கோரி கடந்த டிசம்பர் மாதம் முதலியார்பேட்டையில் நடந்த பொதுமக்கள் குறைதீர்வு முகாமில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரத்திடம் புகார் மனு அளித்தார்.
அதனைத் தொடர்ந்து
முதலியார் பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன் , இந்த வழக்கு சம்பந்தமாக விசாரிக்க விசாரணை அதிகாரியாக முதலியார்பேட்டை ஏ.எஸ்.ஐ., சுப்ரமணியனை நியமித்ததாகவும், அவர் புகார் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பாதிக்கப்பட்ட பாபுவிடம் தனது வண்டிக்கு 500 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பவும், தனக்கு 10 ஆம் நம்பர் ஷூ வாங்க 1,800 ரூபாய் கேட்டுள்ளார். மேலும்
பெட்ரோலுக்கு 500ம், ஷூ வாங்கவும் ஏ.எஸ்.ஐ., சுப்ரமணியனுக்கு கூகுள்பே மூலம் 1,500 ரூபாயை பாபு அனுப்பியும், தொடர்ந்து புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் ஏ.எஸ்.ஐ., சுப்ரமணியன் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாபு முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் டிஐஜி சத்திய சுந்தரத்திடம் மீண்டும் புகார் அளித்தார்.
மேலும் சுப்ரமணியன் பணம் கேட்ட ஆடியோ, கூகுள்பே மூலம் பணம் அனுப்பிய ஆதாரங்களும் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து
டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன்படி, ஏ.எஸ்.ஐ., சுப்ரமணி மீதான புகார் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க முதலியார்பேட்டை போலீஸ் நிலைய அதிகாரிக்கு சீனியர் எஸ்.பி., கலைவாணன் உத்தரவிட்டார். ஏ.எஸ்.ஐ., சுப்ரமணியன் லஞ்சம் வாங்கியது உண்மையா என துறை ரீதியான தீவிர விசாரணை நடைபெற்று விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் பணம் வாங்கியது உறுதிப்படுத்திய நிலையில் ஏ.எஸ்.ஐ சுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி ஷாலினி சிங் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் வழக்கு பதிவு செய்ய விஜிலன்ஸ்க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.