புதுச்சேரியில் உள்ள ஏதாவது ஒரு இடத்திற்கு மொழிக்காக பாடுபட்ட கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்படும்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்றைய கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி: புதுச்சேரி அரசு வாக்குறுதி அளித்தபடி, தலைவர் கலைஞருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதா? அதற்காக இடம் ஏதும் தேர்வு செய்யப்பட்டதா? இதுவரை ஏன் அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கேள்வி எழுப்பினார்.

அப்போது பேசிய அமைச்சர் திருமுருகன்: அரசு சார்பில் இதுவரை குழு அமைக்கப்படவில்லை. கலைஞருக்கு சிலை அமைப்பது அரசின் பரிசீலனையில் உள்ளது என்றார்.

எரிர்கட்சி தலைவர் சிவா பேசுகையில்: தவறான தகவலை அமைச்சர் கூறுகிறார். கடந்த ஆட்சியிலேயே குழு அமைக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கிடப்பில் போடப்பட்டது. சட்டமன்றம் எதிரே கூட இடம் தேர்வு செய்யப்பட்டது. எங்களைப் பொறுத்தவரை இந்த சமூகத்துக்கும் மக்களுக்காக பாடுபட்ட தலைவர்களுக்கு இந்த அரசு சிலை வைக்க வேண்டும். அதில் எந்த மாறுபட்ட கருத்தும் யாருக்கும் இருக்க முடியாது. அதன்படி மறைந்த தலைவர் கலைஞருக்கு சிலை வைப்பதோடு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் சிலை வைப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அரசு அறிவித்துவிட்டு தற்போது இல்லை என்பது தான் வருத்தம் அளிக்கிறது.

அனிபால் கென்னடி: புதுச்சேரி இன்றைக்கு தனித்தன்மையோடு ஒரு மாநில அந்தஸ்து என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றால், அதற்கு காரணம் கலைஞர்தான். இணைப்பு எதிர்ப்பு போராட்டத்தின்போது, புதுச்சேரிக்கு ஆதரவாக நின்றவர், கலைஞர் அவருக்கு இந்த அரசு மரியாதை செலுத்த வேண்டும்.

எதிர்கட்சி தலைவர் சிவா: கடந்த ஐந்து ஆண்டுகளாக கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறி வருகிறோம். தற்போது இந்த ஆட்சியும் நிறைவடையக்கூடிய சூழ்நிலையில் இனிமேல் செய்வார்களா? என்றால் இதற்கு மேல் வரப்போவதில்லை என்பதாகவே உங்கள் பதில் இருக்கிறது.
இருப்பினும் சமூக நலனுக்காகவும் மக்களுக்காகவும் பாடுபட்ட தலைவர்களை சிலை வைப்பதில் அவரால் புதுச்சேரிக்கு என்ன பயன் ஏற்பட்டது என்பதையெல்லாம் பார்க்க கூடாது.
பெருந்தன்மையோடு தலைவர்களுக்கு சிலை அமைத்து இந்த அரசு மரியாதை செய்ய வேண்டும்.

சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு: தலைவர்களுக்கு சிலை வைக்கும் போது புதுச்சேரிக்காக பாடுபட்ட தலைவர்களுக்கும் சிலை அமைத்து மரியாதை செய்ய வேண்டும். தங்களது சொத்துகளையெல்லாம் எழுதிக் கொடுத்த சின்ன சுப்பராய பிள்ளை தியாகு முதலியார் போன்றவர்களுக்கு சில அமைத்து இந்த அரசு மரியாதை செலுத்த வேண்டும்.

அப்போது பேசிய முதல்வர் ரங்கசாமி: முன்னாள் முதல்வர் தலைவர் கலைஞருக்கு சிலை வைக்கம் எண்ணம் அரசுக்கு உண்டு எல்லோராலும் மதிக்கப்படக்கூடிய தலைவர் கலைஞர். தமிழக மக்களும் தமிழுக்கும் அவர் ஆற்றிய பணி மிகப் பெரியது. எல்லோருக்கும் போற்றப்படக்கூடிய தலைவர். அவருக்கு சிலை வைக்க வேண்டும் என்பதில் இந்த அரசுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. புதுச்சேரிக்கு நன்மை உண்டா என்று அரசு எண்ணவில்லை. புதுச்சேரியின் நலனுக்கு குரல் கொடுத்தவர், பாடுபட்டவர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளால் பொது இடத்தில் சிலை வைக்க முடியவில்லை. இதுபோன்ற சூழலில் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது.
நிச்சயமாக அவருக்கு மரியாதை அளிக்கக்கூடிய நிலையில் புதுச்சேரியில் ஏதாவது ஒரு இடத்திற்கு கலைஞர் பெயர் வைத்து அரசு மரியாதை செலுத்தும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.