புதுச்சேரியில் வேலைவாய்ப்பு, வருவாயை பெருக்க 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி: முதல்வர் ரங்கசாமி விளக்கம்

புதுச்சேரி சட்டபேரவையில்
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி பதிலளித்து பேசினார் அப்போது, ஆளுநர் உரையின்போது பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கி மக்களின் துயர் துடைத்ததற்கு பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவித்திருக்கிறார்.
மத்தியக்குழு வருகையின் போது புயல் பாதிப்பின் சுவடு கூட தெரியாமல் அரசு மிக துரிதமாக செயல்பட்டது. புதுச்சேரி மாநில அரசின் வரி வருவாய் அதிகரித்துள்ளது. தனிநபர் வருமானமும் அதிகரித்துள்ளது,

துணைநிலை ஆளுநரும் புதுச்சேரி வளர்ச்சிக்கு தொலைநோக்கு பார்வையை வைத்திருக்கிறார். இதன் மூலம் சுற்றுலாவும் மேம்படும் வகையில் பல்வேறு திட்டங்கள் அரசு தொடர்ச்சியாக செயல்படுத்த இருக்கிறது. புதுச்சேரி அரசு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பத்தாயிரம் இடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மூவாயிரம் பணியிடங்களை நிரப்பி இருக்கிறோம். வரும் ஆண்டுகளில் 2448 பணியிடங்களையும் நிரப்புவதற்கு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

புதுச்சேரியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வருவாய பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் புதுச்சேரி அரசுக்கு ரூ. 500 கோடியும் ஒரு தொழிற்சாலைகளில் 500 என ஐந்தாயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
தண்ணீரை அதிகம் உறிஞ்சாத, சுற்றுச்சூழல் பாதிக்காத நிலையில் தான் இந்த தடையில்லா சான்று கொடுக்கப்பட்டிருக்கிறது .
ஆனால் வெளியில் சிலர் இதனை எதிர்த்து அதிகளவு தண்ணீர் உறிஞ்சப்படும் என்று கூறி சுவரொட்டி ஒட்டுகிறார்கள் . அது எதற்காக அப்படி செய்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். பெரிய பாதிப்பு வருமா எப்படிப்பட்ட சூழ்நிலையில் இதை கொண்டு வருகிறார்கள் என்பதை எல்லாம் பார்க்க வேண்டும் .

எல்லோருடைய கருத்தையும் கேட்கிறேன் மதுவிலக்கு கொண்டு வர முடியுமா? என்றால் முடியாது. பூரண மதுவிலக்கை கொண்டு வர நான் தயாராக இருக்கிறேன். எம்.எல்ஏக்கள் தயாரா? அது சாத்தியமற்றது என்றார். மேலும் முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலர், செயலர் என ஒருங்கிணைந்து பணியாற்றினால்தான் மாநிலம் வளர்ச்சியடையும் என தெரிவித்த அவர்,
சொன்னதை செய்யும் அரசாக எனது அரசு இருக்கிறது.. தற்போது ரூ. 2500 குடும்பத் தலைவிகளுக்கு அறிவித்திருக்கிறோம்.
முதியோர் உதவித்தொகை ரூ. 500 உயர்த்தியுள்ளோம். இதனை அரசால் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. ஆனால் இதனை நிச்சயமாக நிறைவேற்றிக் கொடுப்போம் என்றவர்,
மாநில அந்தஸ்து புதுச்சேரிக்கு மிகவும் அவசியமானது, அதனை துணைநிலை ஆளுநர் பிரதமரிடம் எடுத்துக் கூறி வாங்கித் தருவார் என எதிர்பார்க்கிறோம் அரசு செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் கேட்பதை நிறைவேற்றி தர வேண்டும்.
எதிர்மறை இன்றி அதிகாரிகள் கோப்புகளை கையாள வேண்டும் என தெரிவித்த அவர், தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வரும் வகையில் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு ஆளுநர் ஒத்துழைப்பு தந்து வருகிறார். அதிகாரிகளின் எதிர்மறையான போக்கால் மாநில வளர்ச்சி பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.