உமாசங்கர் கொலையில் எனக்கு தொடர்பு இல்லை.! உமாசங்கர் தந்தை புகாருக்கு புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ.சரவணகுமார் மறுப்பு…

புதுச்சேரி பாஜக பிரமுகர் உமாசங்கர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பாஜக‌ அமைச்சர் சாய் சரவணகுமாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாக உமாசங்கரின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், உமாசங்கர் கொலையில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லையென ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் மறுப்பு வீடியோ வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரி சாமிபிள்ளைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் உமாசங்கர் (40). இவர் காமராஜ் நகர் தொகுதி பாஜக பொறுப்பளராக உள்ளார். இவர் மீது வழிப்பறி, பாலியல் தொழில், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் லாஸ்பேட்டை காவல் நிலையத்தின் ரெளடிகள் பட்டியலில் இருக்கும் இவர், புதுச்சேரி பா.ஜ.க-வின் மாநில இளைஞரணி துணைத் தலைவராக இருந்துவந்துள்ளார்.

இந்நிலையில் இன்று தொழிலதிபர் சார்லஸ் மார்ட்டின் பிறந்தநாள் விழா கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள பாரீஸ் திருமண நிலையத்தில் நடைபெற இருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகளை அவர் நேற்று இரவு மேற்கொண்டிருந்தார். அந்த பணிகளை முடித்துவிட்டு அங்கிருந்து நள்ளிரவு 12 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பாட்டார். அப்போது அங்கு 5 இருசக்கர வாகனங்களில் வந்த 10 க்கும் மேற்பட்ட கும்பல் உமாசங்கரை அரிவாள் மற்றும் கத்தியால் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலையே உமாசங்கர் உயிரிழந்தார். இந்த கொலை புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உமாசங்கர் கொலை தொடர்பாக லாஸ்பேட்டை காவல்நிலைய‌ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில்,
உமாசங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர் வசிக்கும் சாமிபிள்ளைதோட்டம் பகுதியை சேர்ந்த கர்ணன் என்கிற ரவுடிக்கும், இவருக்கும் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் கர்ணன் உத்தரவின்பேரில் உமாசங்கரை வெட்டி படுகொலை செய்ததாக திண்டிவனம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 வாலிபர்களை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ரவுடி கர்ணனை தேடி வருகின்றனர்.

இதனிடையே நிலப்பிரச்சினை காரணமாக உமாசங்கருக்கும், பாஜக அமைச்சர் சாய் சரவணகுமாருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகவும், உமா ஷங்கரின் கொலைக்கு புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமாரும் காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக உமாசங்கரின் தந்தை காசிலிங்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பாஜக பிரமுகர் கொலையில், பாஜக அமைச்சருக்கே தொடர்பு உள்ளதாக உமாசங்கரின் தந்தை அளித்துள்ள புகாரால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்‌ தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து அமைச்சர் சாய் சரவணகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
தமக்கும் உமாசங்கர் கொலைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் இது போன்ற தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர் என்றும், குயில்தோப்பு நில விவகாரத்தில் தனது தங்கை சட்டப்படி நிலத்தை வாங்கியதாகவும், அது தமக்கு சொந்தம் என உமாசங்கர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் கூறியதின் அடிப்படையில் இதுகுறித்து உண்மை நிலையை ஆராய மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் கொடுத்தேன் அவ்வளவுதான்.‌ அதற்கும் மாவட்ட ஆட்சியர் மூலம் தீர்வு கிடைத்துவிட்டது. இத்தகைய சூழலில்
உமாசங்கர் கொலையில் என்னை தொடர்புபடுத்தி தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதோடு, இதுகுறித்து துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் மற்றும் டிஜிபியிடம் புகார் அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.