புதுச்சேரி தந்தை பெரியார் நகரில் செயல்பட்டு வரும் பிரிட்ஜஸ் லெர்னிங் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்துள்ளது.
10ம் வகுப்பு தேர்வில், பள்ளியின் மாணவர்கள் 481, 447 மற்றும் 430 மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர். இந்த சிறப்பான வெற்றியை முன்னிட்டு, பள்ளியின் தாளாளர் திருமதி புவனா வாசுதேவன், உயர்ந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, சால்வை அணிவித்து கௌரவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், “சராசரி மற்றும் குறைவான திறனுடைய மாணவர்களையும் தனிப்பட்ட முறையில் கவனித்து, அவர்களுக்குள் கல்வி ஆர்வத்தை வளர்த்து, தொடர்ந்து ஊக்கமளித்து கல்வியில் முன்னேற்றம் காணச் செய்கிறோம்,” என்றார். மேலும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் சர்வதேச தரத்திலான தொழில்முனைவோர் கல்வி வழங்கப்படுவதாகவும், வேலை வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தும் வகுப்பறைத் தாண்டிய கற்றல் முறைகள் மூலம் பயிற்சி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு தகுந்த சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
“எங்கள் பள்ளியின் முக்கிய நோக்கம், ஒவ்வொரு மாணவரின் உள்ளகத் திறனை வெளிக்கொண்டு வந்து, கல்வியில் ஆர்வத்தை தூண்டி, அவர்களை வாழ்க்கையில் முன்னேறச் செய்வதே. இந்த வெற்றிக்கு பாடுபட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,” என்று தாளாளர் கூறினார்.