புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாத உதவித்தொகை ரூ. 2500 ஆக உயர்வு… முதியோர் உதவித்தொகை ரூ. 500 உயர்வு… இலவச அரிசியுடன் 2 கிலோ கோதுமை இலவசம்: மேலும் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் 6 வது பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10ம் தேதி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன் துவங்கியது. துணைநிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று பேசினர். தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடியது.
அப்போது நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 2025-2026ம் ஆண்டுக்கு ரூ.13,600 கோடிக்கு பட்ஜெட்டினை தாக்கல் செய்து பேசுகையில், இனிமேல் வானிலை அடிப்படையில் பயிர்காப்பீடு செய்யப்படும். தென்னை மரத்துக்கும் இந்தாண்டு முதல் காப்பீடு, இனி ஆண்டு தோறும் விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் மழைக்கால நிவாரணமாக வழங்கப்படும். கடல் ஆமைகளை பாதுகாப்புக்கு குஞ்சு பொறிப்பகம் ஏற்படுத்தப்படும். சதுப்பு நிலங்களை கணக்கெடுத்து பாதுகாக்கப்படும். 50 சதவீத மானியத்தில் இரண்டு கறவைப்பசுக்கள் 1200 பயனாளிகளுக்கு வழங்கப்படும். கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் 12 ஆயிரம் கடக்நாத் கோழி குஞ்சுகள், 25 ஆயிரம் வான் கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படும்.

எவ்வித உதவித்தொகையும் பெறாத வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் ரூ. 1000 உதவித்தொகை ரூ. 2500 வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை ரூ. 500 உயர்த்தி வழங்கப்படும். அரசு துறைகளில் 2500 காலிப்பணியிடங்கள் இந்தாண்டு முழுமையாக நிரப்பப்படும். ஆதி திராவிடர், பழங்குடியின சமூகத்தில் 30 வயது கடந்து திருமணம் ஆகாத, கணவரை இழந்த வேலையற்ற மகளிருக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் நிதி வேலைக்கு செல்லும் வரை வழங்கப்படும்.

கலைமாமணி விருதுகளோடு இனி காரைக்கால் அம்மையார் பெயரிக் விருதுகள் வழங்கப்படும். இலவச அரிசியை தொடர்ந்து வழங்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இனி இலவச அரிசியோடு 2 கிலோ கோதுமையும் சேர்த்து வழங்கப்படும். பாண்லேவில் ஐஸ்க்ரீம் தயாரிப்பை ஊக்குவிக்க புதிய ஐஸ்க்ரீம் பிளாண்ட் அமைக்கப்படும். தனியார் பங்களிப்புடன் லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் இயக்கப்படும். விடுபட்ட மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். வாரத்தில் இரண்டு நாட்கள் என்பதை மாற்றி இனி தினமும் மாலை நேரத்தில் சிறுதானிய சிற்றுண்டி, மற்றும் முட்டை இனி தினமும் வழங்கப்படும். மருத்துவம், பொறியியல் பாடப்பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட செண்டாக் உயர்கல்வி நிதி, இனி அனைத்து பாடப்பிரிவுகளுக்கு வழங்கப்படும். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்குவிப்பு தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மீனவர்களுக்கான ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ. 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். 1000 புதிய பயனாளிகள் ஓய்வூதியம் வழங்கப்படும்.

புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்து மனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவு துவங்கப்படும். கோயில்களை புனரமைக்க வழங்கப்படும் நிதி ரூ. 3.50 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆண்டு தோறும் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 2 கோடியில் இருந்து ரூ. 3 கோடியாக உயர்த்தப்படும். கிழக்கு கடற்கரை சாலையில் அமையவுள்ள புற நகர் பேருந்து நிலையத்துக்கு முன்னாள் பாரதப்பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாய் பெயர் சூட்டப்படும். சோலை நகர் புறக்காவல் நிலையம் காவல் நிலையமாக தரம் உயர்த்தப்படும். மத்திய சிறையில் ஏழை சிறைக்கைதிகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
ராஜ்நிவாசை பழமை மாறாமல் புனரமைக்க ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்னனு வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சாலை வரியில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். பொதுபோக்குவரத்து பயன்பாட்டுக்கு முதல் கட்டமாக 75 பேருதுகள் வாங்கப்படும்.

சிஎன்ஜி யில் இயங்கும் டெம்போ வாங்க 50 சதவீத மானியம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஈமச்சடங்கு நிதியுதவி ரூ. 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

ஆதி திராவிட மற்றும் பழங்குடியின சேர்ந்த முதியோர், விதவை, முதிர்கன்னி, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் முதியோர் ஓய்வூதியத்துடன் ரூ. 500 கூடுதலாக வழங்கப்படும். தாய், தந்தையை இருவரையும் இழந்த ஆதி திராவிட மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு 18 வயது முடியும் வரை கல்வி, அடிப்படை தேவைகளுக்காக மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை ரூ. 3400, 6ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ரூ. 4 ஆயிரம், எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ரூ. 5 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும். இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ. 5 ஆயிரம், உதவித்தொகை ரூ. 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப அவரது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது எனது அரசின் கடமையாகும். இதனை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அனைத்து துறைகளிலும் வெளிப்படையான நிர்வாகத்தின் வாயிலாக குழந்தைகள்,மகளிர் மாணவ செல்வங்கள், முதியோர் மாற்றுத்திறனாளிகள் ஆதிதிராவிட பழங்குடியினத்தவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் அனைத்து பிரிவினும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதன் மூலம் இம்மாநில சமூக பொருளாதார வளர்ச்சி மேம்பட வழி வகுக்கிறது. புதுச்சேரியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தனிநபர் வருமானம் உயர்ந்து நமது பொருளாதாரம் முன்னேற்றம் அடைவதற்கு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு முக்கிய பங்கு வைக்கிறது.
எனவே அரசின் பல்வேறு மூலதனப் பணிகள் சொத்துக்கள் அரசு சார்பு நிறுவனங்களின் மூலதன சொத்துக்கள் உருவாக்கும் பொருட்டு அளிக்கும் கொடை ஆகியவற்றுக்கு கடந்த ஆண்டை விட இந்த வரவு செலவு திட்டத்தில் கூடுதலாக ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதே வேளையில் மாநிலத்தின் நிதி பற்றாக்குறை மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் நிலுவையில் உள்ள மொத்த கடன் விகிதம் ஆகியவை அனுமதிக்கப்பட்ட அளவுக்கு உள்ளது. என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் மாநிலத்தின் நிதி நிலைமையை மேம்படுத்த வழிவகை செய்யவும் விரைவான பொருளாதார வளர்ச்சி அடையவும் அனைத்து வகையான நடவடிக்கையும் அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது என்பதை அனைத்து உறுப்பினர்களும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். காலை 9.32 மணிக்கு பட்ஜெட் உரையை ஆரம்பித்த முதல்வர் ரங்கசாமி 10.43 தனது உரையை நிறைவு செய்தார். 1 மணி நேரம் 10 நிமிடங்கள் முதல்வரின் பட்ஜெட் உரைக்கு பின்னர் எம்எல்ஏக்கள் அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.