மார்ச் 12-ல் புதுச்சேரி பட்ஜெட் தாக்கலாகிறது: தேர்தலை முன்னிட்டு பட்ஜெட்டில் ஏராளமான இலவச அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு.!

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் 10 ஆம் தேதி துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாகவும், 12 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி 2025 – 2026 ம் நிதிநிலை ஆண்டிற்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், 15வது சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடர் வரும் மார்ச் மாதம் 10 ம் தேதி காலை 9.30 மணிக்கு துணைநிலை ஆளுநர் உரையுடன் துவங்குகிறது. தொடர்ந்து
11ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுகின்றனர். இதையடுத்து 12 ம் தேதி 2025-2026ம் நிதிநிலை ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டினை நிதித்துறை பொறுப்பு வகிக்கும், முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்யவுள்ளார்.
தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூடி பட்ஜெட் கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை முடிவு செய்யும் என்றார். மேலும் பேசிய அவர், கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி 93 சதவீதம் முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமையிலும், தரம் தாழ்ந்தும் பேசக்கூடாது. இதை மீறினால் சட்டபை கூட்டத்தின் போது தக்க பதிலும், நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார். மேலும் தானாம்பாளையம் தனியார் பள்ளி வழக்கில் குழந்தைகள் நலக்குழு புகாரின் பேரில் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவ அறிக்கை கிடைத்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூர் விசாரணை மீது பெற்றோர் உள்ளிட்டோருக்கு நம்பகத்தன்மை இல்லாவிட்டால் சிபிஐ விசாரணைக்கு ஆட்சேபனை இல்லை என்றார். நடிகர் விஜய், முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கமானவர், நண்பர் என்பதால் அடிக்கடி பேசுகிறார். ரங்கசாமியின் வழிகாட்டுதலின் பேரில் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். ஆனால் தொடர்ந்து முதல்வர் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பார், அவர்தான் வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர், மேலும் வெற்றிப்பெற்று ஆட்சியமைப்பார். இதனை பாஜக தேசிய தலைமையின் முடிவாகும் என்றார். மேலும் நான் தேர்தலில் டெபாசிட் வாங்கமட்டேன் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். நான் சவால் விடுகிறேன், அவர் தனது சொந்த ஊரான பூராணங்குப்பம் கிராமம் இருக்கும் மணவெளி தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட அவர் தயாரா? என சவால் விடுத்தார்.

இதனிடையே 2026 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு சலுகைகளுடன் கூடிய பட்ஜெட் தயாரிக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

எனவே பட்ஜெட்டில் ஏராளமான வரிச்சலுகைகள், இலவச அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. இந்த கூட்டத் தொடரை ஒரு மாத காலம் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.