குமரி அனந்தனின் மறைவு தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரிய பேரிழப்பு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இரங்கல்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்:-
இலக்கியச் செல்வர் என்று அனைவராலும் போற்றப்பட்ட முதுபெரும் அரசியல் தலைவரும் புதுச்சேரியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் திருமதி தமிழசை சௌந்தரராஜன் அவர்களின் தந்தையுமான திரு குமரி அனந்தன் அவர்கள் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக உள்ளது.

சிறந்த தேசப் பற்றாளராக விளங்கிய அவர், நான்கு முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். தமிழ்மொழி தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ்க் கலாச்சாரத்தின்மீது ஆழ்ந்த பற்று கொண்டு தமிழ் மொழிக்காகவும், தமிழர் நலனிற்காகவும் பல அரும்பணிகளை ஆற்றிய அவர், தமிழில் மிகச்சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.

பாராளுமன்றத்தில் தமிழில் கேள்வி எழுப்பும் உரிமையைப் பெற்றுத் தந்து முதன்முதலில் பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றிய பெருமைக்குரிய திரு குமரி அனந்தன் அவர்கள், விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிடவும், தந்தி விண்ணப்பங்கள், மணியார்டர் போன்றவற்றில் தமிழ் இடம் பெறவும் போராடி தமிழ் மொழிக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்தவர்.

தமிழுக்குத் தொண்டாற்றி பெரும் தமிழ்ப்பற்றாளராக விளங்கிய தகைசால் தமிழர் திரு குமரி அனந்தன் அவர்களின் மறைவு, தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரைச் சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தனது இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தின் முதுபெரும் தலைவர் காங்கிரஸ் பேரியக்கத்தில் பெருந்தலைவர் காமராஜருக்கு பிறகு மிகச்சிறந்த தலைவராக விளங்கிய சிந்தனை செல்வர் இலக்கிய செல்வர் திரு. குமரி ஆனந்தன் அவர்கள் மறைந்தார் என்று செய்தி கேட்டு நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்.

தன் இளமைப் பருவத்திலிருந்து காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பணியை ஆற்றியவர் திரு. குமரி ஆனந்தன் அவர்கள். அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழ் மொழியின் மாட்சிமைக்கும் மிகப்பெரிய பணியை செய்திருக்கிறார்‌ அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். சுதந்திரப் போராட்டத்தில் சிறுவயதிலே சிறைக்கு சென்றவர். திரு. குமரி ஆனந்தன் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் வழியிலே அவரோடு இணைந்து கட்சி பணியை செய்து அவருடைய சீடனாக இருந்து அரசியல் கற்றுக் கொண்டவர். அவர் பாராளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக பலமுறை இருந்திருக்கிறார். அவருக்கு தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களும் அறிமுகமானவர்கள். பண்டிதர் நேரு, அன்னை இந்திரா காந்தி, தலைவர் ராஜீவ் காந்தி, அன்னை சோனியா காந்தி அவர்களோடு நெருங்கிப் பழகிய தலைவர்.

அவர் மது ஒழிப்புக்காக நடைபயணம் செய்தவர். பனைமரத் தொழிலை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக போராடியவர். புதுச்சேரி மாநிலத்தில் கூட மகாகவி பாரதியார் அவர்கள் உட்கார்ந்து பாடிய குயில் தோப்பை மிக்க வேண்டும் என்று புதுச்சேரிக்கு வந்து போராட்டம் நடத்தினார்.

அவரோடு நான் நெருங்கி பழகி இருக்கிறேன். அவர் என்னிடம் மிகுந்த பாசத்தோடு உரையாடி இருக்கிறார். பல நல்ல அறிவுரைகளை அவரிடம் இருந்து நான் கேட்டு தெரிந்திருக்கிறேன். அவர் ஒரு சிறந்த தியாகி. சிறந்த அரசியல்வாதி. எல்லோரையும் அரவணைத்து செல்கின்ற மனபக்குவம் உடையவர். கூட்டணி கட்சிகளை எல்லாம் அரவணைத்து செல்கின்ற தலைவர். குறிப்பாக கலைஞர் அவர்களிடம் நெருக்கமாக பழகியவர். திரு. ஸ்டாலின் அவர்களுக்கு கூட திரு. குமரி ஆனந்தன் அவர்கள் மீது மிகுந்த மதிப்பு உண்டு. அவருடைய மகள் டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களை நான் சந்திக்கும் போதெல்லாம் திரு‌. குமரி ஆனந்தன் அவர்களுடைய உடல் நலத்தை நான் விசாரிப்பது உண்டு.

தமிழ்நாட்டில் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் இப்போது நம்மை விட்டு பிரிந்து விட்டார். அவருடைய இறப்பு நமக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ் மொழிக்கு இழப்பு. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.