நாட்டில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்கள் எங்கு சென்றாலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும், கமாண்டோ பாதுகாப்பும் வழங்கப்படும். முதல்வர்கள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்வதற்காக அவர்களது வாகனத்தின் முன்பும் பின்பும் கான்வாய் எனப்படும் பாதுகாப்பு வாகனங்கள் செல்வது வழக்கமான நடைமுறையாகும்.
இந்நிலையில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி காமராஜர் வழியை பின்பற்றி எளிமையாக இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி தன் வாகனத்துக்கு , முன்னும், பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் வரக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் காவல்துறை மாநில முதலமைச்சருக்கு பாதுகாப்பு கொடுப்பது கட்டாயம் என்பதால், முதலமைச்சரின் வாகனத்தை பின் தொடர்ந்து 5 காவலர்களை கொண்ட எஸ்கார்ட் வாகனம் வழக்கமாக செல்கிறது. சில நேரங்களில் முதலமைச்சர் பாதி வழியிலேயே தனது வாகனத்தை நிறுத்தி, ஏன் பின் தொடர்கிறீர்கள் என எஸ்கார்ட் வாகன காவலர்களை கடிந்து கொள்வதும் அவ்வப்போது நடக்கும்.
இதற்கிடையே நேற்றைய தினம் கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மகளிர் தினவிழாவில் கலந்து கொண்ட முதல்வர் ரங்கசாமி, பின்னர் கோரிமேட்டில் உள்ள தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சாமி கோயிலுக்கு அன்னதான பூஜைக்கு தனது காரில் வழுதாவூர் சாலை சண்முகாபுரம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது முதல்வர் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த எஸ்கார்ட் வாகனத்தில் இருந்த போலீசார், எதிரே வந்த வாகனங்களை வழிவிடுமாறு முதலமைச்சர் வாகனம் பின்னால் இருந்து சைகை காட்டியபடி எதிர்திசையில் முன்னேறியுள்ளனர்.
அப்போது எதிரே விக்கிரவாண்டி நோக்கி சென்று கொண்டிருந்த நீலநிற ஸ்விப்ட் கார் மீது, எதிர் திசையில் வந்த எஸ்கார்ட் வாகனம் பயங்கரமாக மோதியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்து நடந்தது தெரியாமல் முதலமைச்சரின் கார் கடந்து சென்றுவிட்டது. விபத்துக்குள்ளான நீலநிற காரை வடக்கு போக்குவரத்து காவல் நிலையத்தின் பின்புறமும், எஸ்கார்ட் வாகனத்தை கோரிமேடு காவலர் குடியிருப்பு பகுதியில் போலீசார் மறைத்து வைத்திருந்தனர். இதுகுறித்து வடக்கு போக்குவரத்து போலீசாரிடம் கேட்டபோது, அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என கூறினர். ஏனெனில் பைலட் வாகனம் இல்லாமல் சென்று விபத்து ஏற்பட்டதால், இதனை மூடி மறைக்கும் வகையில் போலீசார் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சட்டப்பேரவையில் முதல்வர் கார் முன்பு, பெட்ரோல் ஊற்றி ஒருவர் தீக்குளிக்க முயன்ற நிலையில், தற்போது முதல்வரின் பாதுகாப்பு வாகனம் விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் முதல்வர் ரங்கசாமியின் பாதுகாப்பை கேள்விகுறியாக்கியுள்ளது.