மாநகராட்சியாகும் புதுச்சேரி நகராட்சி… மருத்துவ பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு: முதல்வர் ரங்கசாமியின் பட்ஜெட் அறிவிப்புகள்

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10ஆம் தேதி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 12-வது நாளான இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். பொதுப்பணித்துறை, சுற்றுலா மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் லஷ்மிநாராயணன் பேசுகையில், கடலில் மீன்பிடிக்கும்போது கைது செய்யப்பட்டு இலங்கை கடற்படையினரால் சிறையில் அடைக்கப்படும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு, அவர்கள் இந்தியா திரும்பும் வரை ஒரு நாளைக்கு ரூபாய் 500/- வழங்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும், அரசு ஒப்புதல் விரைவில் பெறப்பட்டு இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் புதுச்சேரியில் இருந்து பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு விமான சேவை அளிக்கப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரி – கண்ணூர் இடையே விமான சேவையை விரிவுபடுத்த நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என கூறிய அமைச்சர் லட்சுமிநாராயணன், புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும், விரிவாக்கத் திட்டத்திற்கு தமிழக பகுதியில் தேவைப்படும் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல் தெரிவித்தார்.

இறுதியாக பேரவையில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார். மேலும் சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் எனவும், NRHM ஊழியர்களுக்கு தற்போது பெறும் ஊதியத்துடன் கூடுதலாக ரூபாய் 15 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.