மாநில வளர்ச்சிக்காக பிரதமரை சந்திக்கத் தயங்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி! கூட்டணியை விட்டு வெளியேற‌ தயாரா? எதிர்கட்சித் தலைவர் சிவா சாடல்

இதுகுறித்து புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியா விடுதலைப் பெற்று சுதந்திர ஆட்சி அமைந்த பிறகு நாட்டில் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் அடிப்பட்டு கிடந்த நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதில் இன்றியமையாத ஒன்று (PLANNING COMMISSION) என்ற திட்டக்குழு ஆகும். ஆண்டுதோறும் எப்படிப்பட்ட முன்னேற்றத் திட்டங்களை முன்னெடுப்பது என்பது பற்றி ஒன்றிய அரசும், மாநில அரசகளும் அமர்ந்து திட்டமிடவும், செயல்படுத்தவும் இக்குழு கூட்டம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் பாரதிய ஜனதா அரசு வந்த பிறகு திட்டக்குழுவை கலைத்துவிட்டு நிடி ஆயோக் என்ற அமைப்பை உருவாக்கினர். அதன் ஆண்டுதோறுமான கூட்டத்தில் ஒன்றிய அரசு மாநில அரசுகளின் கோரிக்கைகளை விவாதிக்கவும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இடமாகவும் இந்த கூட்டம் அமைந்திருக்கிறது.

மாநில வளர்ச்சி, திட்ட செயல்பாடுகள், மாநிலத்திற்கான நிதி ஆதாரங்கள் போன்றவைகளை விவாதிக்கும் வாய்ப்பாக இந்த கூட்டம் பயன்பட்டு வருகிறது. பின்னடைவாக இருக்கின்ற பல மாநிலங்கள் தங்களுடைய நிதி ஆதாரங்களை உயர்த்தி கேட்கும் கோரிக்கைகளை முன் வைப்பதற்கு இந்த கூட்டம் பயன்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை நமது முதல்வர் பயன்படுத்தாமல் புறக்கணிப்பதின் நோக்கம் புரியவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் வளர்ச்சித் திட்டங்களைப் பற்றியும், அதற்கான நிதி ஆதாரங்கள் பற்றியும் நேரிடையாக பிரதமரிடம் விளக்குவதற்கான இந்த வாய்ப்பை முதல்வர் பயன்படுத்திக் கொள்வது மாநில வளர்ச்சியில் அக்கறை கொள்வதை பிரதிபலிக்கும்.

ஒரே கூட்டணியில் இருந்துகொண்டு அந்த கூட்டணிக்கு தலைமையேற்கும் பிரதமரை சந்தித்து மாநில வளர்ச்சிக்கு நிதி கேட்காமல் புறக்கணித்தது ஏன்?. என்னுடைய கட்சியின் உயிர் மூச்சு கொள்கையே மாநில அந்தஸ்து பெறுவது தான் என்று கூறி இந்த ஆட்சிகாலத்தில் மட்டும் இரண்டு முறை அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர் மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமரிடம் நேரிடையாக ஏன் வைக்க கூடாது?. இது கடந்த ஓரிரு ஆண்டாகவே இந்த அரசு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு தலைமைச் செயலர் முதல் கொண்டு அதிகாரிகள் எவரும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் தனது கட்டளைக்கு ஏற்ப அதிகாரிகள் செயல்படவில்லை என்றும் இதனால் மாநில வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்றும் பொதுவெளியில் புலம்பித்தீர்க்கும் முதல்வர் இவைகளை களைவதற்கு இந்த கூட்டத்தை ஏன் இவர் பயன்படுத்தி இருக்கக் கூடாது.

நிதி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் பங்கேற்று இருந்தால் 16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையில் லடாக் மற்றம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களை போல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் நிதி ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி இருக்கலாம். ஜிஎஸ்டியால் மாநிலத்திற்கு வரவேண்டிய பங்குத்தொகை முறையாக வரவில்லை என்பதையும், சாதாரண மக்கள் மீது நாளுக்கு நாள் வரித்திணிப்பு அதிகமாகிப் போவதையும் முதல்வர் ஏன் பிரதமரிடம் சுட்டிக்காட்டி இருக்கலாம்.

புதுச்சேரிக்கு வாழ்வு கொடுத்த மூன்று நூற்பாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அவைகளுக்கு சொந்தமான நிலத்தை விற்று கடன்களை அடைத்து மீண்டும் அந்த நூற்பாலைகளை இயக்கி வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்திற்கு அனுமதி கோரி இருக்கலாம்.

மாநிலங்களுக்கு எல்லாம் 42 சதவீதம் ஒன்றிய நிதியுதவி தொடர்கின்ற பொழுது, முன்பு 70 சதவீத அளவிற்கு நிதியுதவி பெற்ற புதுச்சேரிக்கு வெறும் 25 சதவீதம் கூட நிதி இல்லாத அவலத்தை சுட்டிக்காட்டி இருக்கலாம்.

தேசிய கட்டுமான நிதியத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதியை தாராளமாக வழங்கும் நிலையில் புதுச்சேரிக்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதை சுட்டிக்காட்டி புதுச்சேரிக்கு நிதி கேட்டுப்பெற முயற்சித்திருக்கலாம். ஒன்றிய அரசின் ஊக்குவிப்பு திட்டங்களுக்கு யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு 100% நிதியுதவியை மத்திய அரசு வழங்க கோரி இருக்கலாம்.

மேலும், புதுச்சேரிக்கு என்று தனிக்கணக்கு துவங்குவதற்கு முன் புதுச்சேரி அரசு வெளி மார்க்கெட்டில் பெற்ற கடனை தள்ளுபடி செய்யவும், புதுச்சேரி மாநிலத்திற்கு என்று நீண்ட நாள் கடனாக உள்ள ரூ. 11.500 கோடி கடனை தள்ளுபடி செய்யவோ அல்லது அதற்கு கட்டப்படும் வட்டியை ஒன்றிய அரசு ஷேர் செய்யவோ கோரி இருக்கலாம்.

ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் அனைத்து வேலைவாய்ப்புகளிலும், புதுச்சேரி மாணவர்களுக்காக 25 சதவீதம் உள் ஒதுக்கீடும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 25 சதவீத உள் ஒதுக்கீட்டையும் புதுச்சேரி மாணவர்களுக்காக வழங்கவும், சட்டமன்ற புதிய கட்டிடம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், சுற்றுலா வளர்ச்சி உள்ளிட்ட திட்டங்களுக்கு எல்லாம் ஒன்றிய அரசு ஒத்துழைப்பு அளிக்காததால் மாநில வளர்ச்சி முடங்கி கிடப்பதை பிரதமரிடம் சுட்டிக்காட்டி இருக்கலாம்.

எதிர்க்கட்சியாக ஒரு அரசை தலைமையேற்று ஒன்றிய அரசின் பல்வேறு முட்டுக்கட்டைகளை எல்லாம் சந்தித்து வருகின்ற தமிழ்நாடு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இவைகளை எல்லாம் கடந்து மாநில மக்களுக்கு ஏதாவது ஒரு உதவி கிடைக்காதா என்ற நம்பிக்கையோடு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று உள்ளார். அடிப்படை தேவையான கல்விக்கான நிதியைக்கூட ஒதுக்காத ஒன்றிய அரசு மீது கடந்த ஓராண்டாக சட்டப்போர் நடத்திவரும் நிலையில் கூட அவர் இந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கவில்லை.

இப்படிப்பட்ட சூழலில் நம்முடைய முதல்வர் இந்த புறக்கணிப்பது ஏன் என்பது பற்றி மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். இவருக்கு வேண்டும் என்றால் பிரதமரா? அல்லது புதுச்சேரி முதல்வரா? என்ற கவுரவப் பிரச்சனை இருக்கலாம். ஆனால் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் தனது கடமையாக இந்த கூட்டத்தில் பங்கேற்று இருக்க வேண்டும். அப்படி என்றால் இந்த கூட்டம் தேவையற்றதா?. இதனால் எந்த பலனும் இல்லை என்று முதல்வர் சொல்ல வருகிறாரா? அல்லது பிரதமரிடம் இதையெல்லாம் விளக்குவதில் நம்பிக்கை இழந்துவிட்டாரா?. என்பது பற்றி பொதுவெளியில் அறிக்கை வெளியிட வேண்டும். இதுதான் உண்மை என்றால் இந்த கூட்டணியைவிட்டு அவர் வெளியேற வேண்டும் என்று திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.