தரமான குடிநீர் வழங்க வலியுறுத்தி முத்தியால்பேட்டையில் காங்கிரசார் 24 மணி நேரம் காத்திருப்பு போராட்டம்: மக்களின் உயிரோடு முதல்வரும், அமைச்சர்களும் விளையாடுவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் குடிநீர், சாக்கடை பிரச்சனை, குப்பை பிரச்சனை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் 24 மணி நேர காத்திருப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சின்ன மணிகூண்டு எதிரில் நடைபெற்று வருகிறது. முத்தியால்பேட்டை தொகுதி காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் ஈரம் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் முதல்வர் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மக்களுக்கான அடிப்படை தேவைகளை செய்ய முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ் – பாஜக அரசு தவறிவிட்டது. முத்தியால்பேட்டை தொகுதியில் மிகப்பெரிய அளவில் குடிநீர் பிரச்னை உள்ளது. குடிநீரில் டிடிஎஸ் அளவு 500 ஆக இருக்க வேண்டும். ஆனால், இப்போது முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள 14 பூத்துகளில் 2400க்கு மேல் டிடிஎஸ் அளவு அதிகமாக உள்ளது.

இந்த தண்ணீரை பொதுமக்கள் தொடர்ந்து குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு 3 அல்லது 4 ஆண்டுகளில் நீரிழிவு நோய் வரும். எல்லா பகுதிகளிலும் சாக்கடை பிரச்னை உள்ளது. இதையும் தீர்த்து வைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பொது இடங்களில் குப்பைகளை வாருவது கிடையாது. இதனாலும் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படுகிறது. இப்பிரச்னைகளை முன் வைத்து இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மஞ்சள் ரேஷன் கார்டு உள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000, சிவப்பு ரேஷன் கார்டு உள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,500 உதவித்தொகை கொடுக்க போகிறோம் என்று முதல்வர் கூறுகிறார். உதவி தொகை கொடுப்பது இருக்கட்டும். முதலில் மக்கள் உயிரோடு இருக்க வேண்டும்.

குடிநீர், சாக்கடை, குப்பை வாருதல் உள்ளிட்ட மக்கள் அடிப்படை பிரச்னைகளை கவனிக்காமல், ரெஸ்ட்ரோ பார்களை திறந்து சாராய ஆறு ஓட விட்டுள்ளனர். இதனால் மக்கள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த போராட்டம் நடத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அனுமதி கேட்டோம். ஆனால், காவல்துறையின் அதிகாரம் பறிக்கப்பட்டு அமைச்சரே நேரடியாக தலையிட்டு இப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேல் போராட்டம் நடத்த அனுமதி தர முடியாது என கூறியுள்ளனர். ஹிட்லர் ஆட்சியில் கூட இப்படி நடக்கவில்லை. போராட்டத்துக்கு அனுமதி கொடுக்காமல் மக்களின் குரல் வலையை நெறிக்கின்ற வேலையை அரசு செய்கிறது.

அரசிடம் மக்கள் வேலை கேட்கவில்லை. விலை உயர்ந்துவிட்டது, அதனை கட்டுப்படுத்துங்கள் என்று கேட்கவில்லை. உயிரோடு இருப்பதற்கு சுத்தமான குடிநீர் தான் மக்கள் கேட்கிறார்கள். இதை செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை. சுகாதாரம், கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்குவதாக முதல்வர் கூறுகிறார். சுகாதாரமாக மக்களை வைத்திருக்க என்ன செய்துள்ளார். மக்களின் உயிரோடு முதல்வரும், அமைச்சர்களும் விளையாடுகிறார்கள்.

மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்ற வேலையை செய்கிறார்கள். இதை தடுத்து நிறுத்துவது யார்? இப்பிரச்னையை தொகுதி சுயேட்சை எம்எல்ஏ தான் தீர்க்க வேண்டும். அவர் எந்த கட்சியையும் சாராதவர். மக்களுக்கு செய்யாமல் நம்முடைய போராட்டத்தை நிறுத்த அமைச்சரிடம் சிபாரிசு செய்கிறார். இதையும் காவல்துறை ஏற்றுக் கொள்கிறது.

புதுச்சேரியில் ஆட்சியாளர்கள் மக்களை கவனிப்பார்களா? இல்லை அவர்களே கவனித்துக் கொள்வார்கள். முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு மட்டும்தான் கொடுப்பார். இதையும் செய்ய மாட்டார். இப்போது, மஞ்சள் ரேஷன் கார்டுக்கு ரூ.1,000 கொடுக்கப்படும் என அறிவித்துள்ளார். நித இல்லாமல் எப்படி உதவித்தொகை கொடுக்க முடியும். இதற்கு நிதி எங்கு இருக்கிறது. பணம் இல்லாமல் அறிவித்துவிட்டு வருகிறவர்கள் தலையில் கட்ட வேண்டியது.

குடிநீரை சுத்திகரித்தால் எல்லாருக்கும் கிடைக்கும். அதை செய்யாமல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் யார் யார் வீட்டு எத்தனை நாட்கள் கொடுப்பார்கள். குடிநீரை எல்லோரும்தான் குடிக்கிறார்கள். இதனால் எல்லோருக்கும்தான் கொடுக்க வேண்டும். இந்த ஆட்சியில் மக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யவில்லை. ஆனால், இதை செய்தோம், அதை செய்வோம் என்பார்கள்.

மக்கள் உயிர் வாழ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தர வேண்டியது அரசின் கட்டமை. இதை செய்யாததால் போராட்டம் நடத்துகிறோம். இதை அடக்க பார்க்கிறார்கள். குடிநீர் பிச்னையை தீர்க்காமல் பொதுப்பணித்துறை அமைச்சர் என்ன செய்கிறார். இந்த போராட்டம் முத்தியால்பேட்டை தொகுதியில் மட்டுமல்ல எந்தெந்த தொகுதியில் குடிநீர் பிரச்னை உள்ளதோ, அந்த தொகுதியிலும் போராட்டம் நடத்துவோம். எங்களை கைது செய்யட்டும். சிறையில் போடட்டும். இந்த போராட்டத்தை மதியம் 2 மணி வரை மட்டும் காவல்துறை அனுமதி கொடுத்துள்ளது. எத்தனை மணி ஆனாலும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த நாராயணசாமி,
தொகுதி மறு சீரமைப்பு பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியின் நிலை மக்கள் தொகை அடிப்படையில் செய்தால் பாதிப்பு ஏற்படும். இதனால் தென்மாநிலங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். வட மாநிலங்களில் தொகுதிகள் அதிகமாகும். 2026-ல் ஏற்கனவே உள்ள பாராளுமன்ற சட்டப்படி தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டும். இது எங்களுடைய கருத்து. இதைத்தான் தென் மாநில முதலமைச்சர்களை அழைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருக்கிறார் என்றார். மேலும் பேசிய அவர், தமிழகத்தில் ஊழல் நடைபெறுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். ஆனால் அவருக்கு பாஜக ஆளும் மகாராஷ்டிரா, அசாம் மாநிலங்களில் நடைபெறும் ஊழல்கள் கண்ணுக்கு தெரியவில்லையா என கேள்வி எழுப்பிய நாராயணசாமி, தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனைதான் நடத்துகின்றனர். அதை வைத்து ஊழல் என்று எப்படி நாம் சொல்ல முடியும் என்ற அவர், மத்திய அமைச்சர் அமித்ஷா பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் ஊழல் அரசுகளுக்கு தலைமை தாங்குவதாக குற்றம்சாட்டினார்.