புதுச்சேரி தலைமை செயலாளர், கலெக்டர் அதிரடியாக இடமாற்றம்.! காரணம் இதுதான்…

புதுச்சேரியில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு செயலர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என முதல்வர், சபாநாயகர் உள்ளிட்ட அமைச்சர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், தலைமை செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு செயலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் புதிய தலைமை செயலாளராக சரத் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பேச்சை தலைமை செயலாளர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கேட்பதில்லை என தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்தது. மேலும் அரசு சார்பில் அனுப்பப்படும் கோப்புகளை பல்வேறு கேள்விகள் கேட்டு திருப்பி அனுப்புவதாக குற்றஞ்சாட்டப்படட்டது.
கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அரசுக்கு ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் செல்வம் எச்சரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் மத்திய அரசிடம் புகார் தெரிவித்திருந்தனர்.

சமீபத்தில் நிதித்துறை செயலாளரும், தலைமை தேர்தல் அதிகாரியுமான ஜவகர் தலைமை தேர்தல் அதிகாரி தவிர அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, நிதித்துறை அமைச்சரும், முதலமைச்சருமான ரங்கசாமியிடம் ஆலோசிக்காமல் இந்த உத்தரவை பிறப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே தலைமை செயலாளர் ராஜீவ் வர்மாவும் தன்னை இடமாற்றம் செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், புதுச்சேரி தலைமை செயலாளராக சரத் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அருணாச்சலப்பிரதேசத்தில் அரசு அதிகாரியாக பணியாற்றி வந்த சரத் சவுகான் புதுச்சேரி தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை செயலாளராக பதவி வகித்து வந்த ராஜீவ் வர்மா சண்டிகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் புதுச்சேரி மாவட்ட ஆட்சியராக இருந்த வல்லவன் கோவாவிற்கும், துணைநிலை ஆளுநரின் செயலாளராக இருந்த சவுத்ரி அபிஜித் விஜய் சண்டிகருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.