புதுச்சேரியில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆசிரியருக்கு தூக்கு தண்டனை – சிறுமி குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணம்: மீனவ கிராம பஞ்சாயத்தினர் தீர்மானம் நிறைவேற்றம்

புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஆறு வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆசிரியர் மணிகண்டனுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு புதுச்சேரி அரசு ரூ. 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென புதுச்சேரி – தமிழக மீனவ கிராம பஞ்சாயத்தினர் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி மணவெளி தொகுதிகுட்பட்ட தானாம்பாளைத்தில் உள்ள தனியார் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு பயின்று வந்த ஆறு வயது சிறுமியிடம் அப்பள்ளியின் ஆசிரியர் மணிகண்டன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் தொடர் போராட்டம் காரணமாக, ஆசிரியர் மணிகண்டன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளிக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு, புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 18 மீனவ கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நல்லவாடு கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர்கள் வீரவல்லவன், பக்தவச்சலம் மற்றும் சமூக அமைப்பினர், ஊர்பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மீனவர்களின் ஆலோசனை கூட்டத்தில், புதுச்சேரி அரசை வலியுறுத்தி ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆசிரியர் மணிகண்டன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்வது மட்டுமின்றி அவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு புதுச்சேரி அரசு ரூபாய் 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தாளாளர் மற்றும் பள்ளியின் முதல்வர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த பள்ளியில் இதற்கு முன்பு இதுபோன்ற வேறு ஏதாவது சம்பவங்கள் நடைபெற்றுள்ளதா? என்பதனை ஆய்வு செய்ய நியாயமான நீதிக்குழு விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து தீர்மான நகல்களை காவல்துறை கண்காணிப்பாளர்களிடம் மீனவ பிரதிநிதிகள் வழங்கினார்கள். மேலும் இந்த தீர்மானத்தின் அடிப்படையில் புதுச்சேரி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவிட்டால், அனைத்து மீனவ கிராமங்களையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தப்போவதாக மீனவ கிராம பஞ்சாயத்தினர் தெரிவித்துள்ளனர்.