புதுச்சேரியில் பரபரப்பு: முன்னாள் அமைச்சரின் வீட்டு வாசலில் எலக்ட்ரானிக் வெடிபொருள் கண்டுபிடிப்பு!

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக ஆளுநர் மாளிகை, முதலமைச்சர் இல்லம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பிரெஞ்சு தூதரகம், ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களுக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர்.

இந்த மின்னஞ்சல்கள் தொடர்ந்து வந்தாலும், அவற்றை அனுப்பும் நபர்கள் யாரென கண்டறிவதில் சைபர் கிரைம் போலீசார், மத்திய சைபர் விசாரணை துறையினர் தொடர்ந்து திணறி வருகின்றனர். இந்த மிரட்டல்கள் எனும் பெயரில் எந்த இடத்திலும் வன்முறை நிகழாத போதும், பொதுமக்களிடையே பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில், இன்று காலை சுப்ரேன் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஷாஜகானின் வீட்டு வாசலில் மர்ம பொருள் ஒன்று இருப்பதை அவர் வீட்டில் பணியாற்றும் ஊழியர்கள் கவனித்துள்ளனர். உடனடியாக அவர்கள் ஒதியன்சாலை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பொதுமக்கள் அப்பகுதிக்குள் செல்லாதவாறு தடுப்புகளை அமைத்தனர். பின்னர், வெடிகுண்டு நிபுணர்கள் (Bomb Disposal Squad) சம்பவ இடத்திற்கு வந்தனர்.
தொடர்ந்து எலக்ட்ரானிக் வெடிபொருள் போல் இருந்த அந்த மர்ம பொருள் பாதுகாப்பாக அகற்றப்பட்டு, சோதனைக்காக பயோஸ்கோப் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மர்ம பொருளை யார் வைத்தனர்? மற்றும் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளும் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. இந்த சம்பவம், ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல்களால் பதற்றமடைந்துள்ள புதுச்சேரியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.