புதுச்சேரியில் பிஆர்டிசி ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்: அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.!

புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழக ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் புதுச்சேரி அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழகம் சார்பில் உள்ளூர் மற்றும் சென்னை, பெங்களூரு, குமுளி, நாகர்கோவில் உள்ளிட்ட வெளியூர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சாலை போக்குவரத்து கழகத்தில் 265 ஒப்பந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பலகட்ட போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், இன்று முதல் ஒப்பந்த ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தபா போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்த ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் இன்று காலை முதல் புதுச்சேரி அரசு பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படாமல் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு தங்களை பணி நிரந்தரம் செய்யும் வரை வேலை நிறுத்தம் தொடரும் எனவும் ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இதனிடையே புதுச்சேரி அரசு பேருந்துகள் ஓடாத நிலையில், தனியார் மற்றும் தமிழக அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுவதால் பயணிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.